மேற்கு வங்க விவசாயி ஒருவர் டைட்டானிக் கப்பல் போன்று தனது கனவு இல்லத்தைக் கட்டிவருவது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள விவசாயி மின்டோராய்(52). இவர் தனது மனைவியுடன் வசித்து வருகின்றார். இவருக்கு டைட்டானிக் கப்பல் போன்று தங்கள் கனவு இல்லத்தைக் கட்ட வேண்டும் என்ற ஆசை. இதற்காக 13 வருடங்களாகப் போராடியும் வருகிறார்.
கடந்த 2010ல் மேற்கு வங்கத்தில் நிச்பரி கிராமத்தில் தனது கனவு இல்லத்தைக் கட்டத் தொடங்கினார் மிண்டோராய். இவர் வீடு கட்ட ஆரம்பித்த சில நாள்களிலேயே பொறியாளர்களுக்கு பணம் கொடுக்க இயலாத சூழ்நிலையால் பின்வாங்கினார். பின்னர், நேபாளம் சென்று அங்கு வீடு கட்டும் பணிகளைக் கற்றுக்கொண்டார். இதன்மூலம் கிடைத்த கட்டுமான அனுபவத்தின் மூலம் தான் சேமித்த பணத்தைக் கொண்டு தானே வீடு கட்டும் பணியில் இறங்கினார்.
மின்டோராயின் கனவு இல்லம் 39 அடி நீளமும், 13 அடி அகலமும் 30 அடி உயரமும் கொண்ட மூன்று மாடிக் கட்டடமாகும். இது அப்பகுதியில் உள்ள அனைவரும் ஆர்வத்துடன் பார்வையிட்டுச் செல்கின்றனர்.
மிகவும் ஏழை விவசாயியான மின்டோராய் கனவு இல்லத்தைக் கட்ட பல போராட்டத்தைச் சந்தித்துள்ளார். ஆனாலும், முயற்சியை அவர் கைவிடவில்லை. சிறுக சிறுக இந்த கட்டுமானத்தைக் கட்ட இதுவரை ரூ.15 லட்சம் வரை அவர் செலவு செய்துள்ளார்.
கட்டடத்தை விரைந்து முடிக்க குத்தகைக்கு நிலம் வாடகைக்கு எடுத்து காய்கறி, தேயிலையைப் பயிரிட்டு வருகிறார். மேலும் எலக்ட்ரிக் ரிக்ஷா ஓட்டி கூடுதல் பணத்தை ஈட்டி வருகிறார். இதெல்லாம் கட்டுமானம் கட்டுவதற்கு உபயோகமாக உள்ளது.
எப்பாடுபட்டேனும், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கும் கட்டடத்தைக் கட்டி முடித்துவிட்டுவேன் என்றார். கனவு இல்லத்துக்கு தனது தாயின் பெயரை வைக்கப்போவதாகவும் தெரிவித்தார். மேலும் வீட்டின் மேல் தளத்தில் உணவகம் ஒன்றைக் கட்டி அதன் மூலம் வருவாய் ஈட்டப்போவதாகவும் அவர் தெரிவித்தார்.
தொலைதூரத்தில் உள்ளவர்கள் கூட கட்டடத்திற்கு வந்து பார்வையிட்டு புகைப்படம் எடுத்துச்செல்கின்றனர். பத்திரிகையாளர்கள் தொடர்ந்து தொலைபேசியில் அழைத்துப் பேசி வருவது மகிழ்ச்சி அளிக்கிறது. விரைவில் தன்னுடைய கனவு நனவாகப் போகிறது என்று மின்டோராய் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.