ஆபரேசன் காவிரியின் கீழ் சூடானில் இருந்து மேலும் 229 இந்தியர்களை பத்திரமாக மத்திய அரசு தாயகம் கொண்டு வந்து சேர்த்துள்ளது.
சூடானில் அந்த நாட்டின் ராணுவத்துக்கும், துணை ராணுவத்துக்கும் கடுமையான போர் நிலவி வருகிறது. இந்த உள்நாட்டுப் போரில் இதுவரை பலர் உயிரிழந்துள்ளனர். போர்க்களமாக காட்சியளிக்கும் சூடானில் இருந்து ஒவ்வொரு நாட்டினரும் அவர்களது குடிமக்களை பத்திரமாக வெளியேற்றி வருகின்றனர். இந்தியா ஆபரேசன் காவிரி என்ற பெயரில் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வருகின்றது. ஆபரேசன் காவிரி மூலம் இதுவரை ஆயிரத்துக்கும் அதிமான இந்தியர்கள் பத்திரமாக தாயகம் திரும்பியுள்ளனர்.
இந்த நிலையில், மேலும் 229 இந்தியர்களை பத்திரமாக மத்திய அரசு தாயகம் கொண்டு வந்து சேர்த்துள்ளது.
முன்னதாக, 365 பேர் சூடானிலிருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டு பெங்களூரு விமான நிலையம் வந்தடைந்தனர். நேற்று முன் தினம் இரண்டு பிரிவுகளாக 754 பேர் இந்தியா வந்தடைந்தனர். இதன்மூலம், தற்போது வரை மொத்தமாக 1,954 பேர் சூடானில் இருந்து பத்திரமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.