ஓமலூர் அருகே மினி லாரி தீப்பற்றி எரிந்து நாசம்!
By DIN | Published On : 14th April 2023 11:28 AM | Last Updated : 14th April 2023 11:28 AM | அ+அ அ- |

ஓமலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மினி லாரி தீப்பற்றி எரிந்து சுமார் ஒரு மணி நேரமாக தீயணைப்பு வாகனம் வராததால் லாரி முழுவதும் எரிந்து சேதமடைந்துள்ளது.
சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள புதுநல்லாகவுண்டம்பட்டி பகுதியை சேர்ந்தவர் மாணிக்கம் மகன் சரவணன். இவருக்கு சொந்தமான மினி லாரியில் இன்று பழங்களை அடுக்கும் பிளாஸ்டிக் பெட்டிகளை ஏற்றிக்கொண்டு பெங்களூரை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
அப்போது, ஓமலூர் தேசிய சாலையில் உள்ள ஒரு வெல்டிங் பட்டறையில் நிறுத்தி தனது மினி லாரியில் வெல்டிங் வைத்த போது, வெல்டிங் பொறி பட்டு லாரி தீப்பிடித்துள்ளது. இந்த தீயின் காரணமாக லாரியில் பழங்கள் அடுக்கும் பிளாஸ்டிக் பெட்டிகள் எரிய தொடங்கியது.
தொடர்ந்து பெரும் விபத்து ஏற்படும் சூழ்நிலையில், ஓட்டுநர் சரவணன் மினி லாரியை எடுத்து கடைகள் மற்றும் ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் நிறுத்தி உள்ளார்.
இதனைத் தொடர்ந்து காற்று பலமாக அடித்ததால் லாரி உள்ளே இருந்த பிளாஸ்டிக் பெட்டிகள் முழுவதும் எரித்ததால் அப்பகுதியில் கறும் புகை எழுந்தது. தொடர்ந்து தீ விபத்து குறித்து உடனடியாக ஓமலூர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். ஆனால் ஓமலூர் தீயணைப்பு வாகனம் வேறு ஒரு பகுதிக்கு தீயை அணைக்க சென்றதால் காடையாம்பட்டி தீயணைப்பு துறைக்கு தகவல் கொடுத்தனர்.
பின்னர் சுமார் 15 கிலோமீட்டர் தூரத்திற்கு அப்பால் இருந்து தீயணைப்பு வாகனம் வருவதற்குள் மினி லாரி முழுவதும் எரிந்து தீக்கிரையானது. இதைத் தொடர்ந்து ஓமலூர் மற்றும் காடையாம்பட்டி இரண்டு தீயணைப்பு வாகனங்களும் சம்பவயிடதிற்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் போராடி தீயை முற்றிலும் அனைத்தனர்.
இதையும் படிக்க: தோரணமலை முருகன் கோயிலில் தமிழ் புத்தாண்டு சிறப்புப் பூஜை
இந்த சம்பவத்தில் சுமார் 30 லட்சம் மதிப்பிலான லாரி தீப்பற்றி முழுவதும் எரிந்து சேதமானது. இந்த தீ விபத்து குறித்து ஓமலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.