தில்லியில் நாளை மறுநாள் (மே 25) 6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தில்லி மக்கள் அனைவரும் வாக்களிக்குமாறு காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி பேசும் விடியோ ஒன்றினை தனது எக்ஸ் தளப்பக்கத்தில் வெளியுட்டுள்ளார் பிரியங்கா காந்தி.
அதில் சோனியா காந்தி ”என் அன்பான தில்லி மக்களே, இந்த தேர்தல் நாட்டின் ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பை காப்பாற்றுவதாக இருக்கவேண்டும். வேலைவாய்ப்பின்மை, பணவீக்கம், அரசியல் சாசனம் மீதான தாக்குதல் போன்றவை இந்தத் தேர்தல் மூலம் விலகவேண்டும்.
உங்கள் ஒவ்வொரு வாக்கும் வேலைவாய்ப்பினை உருவாக்கும், பணவீக்கத்தினைக் குறைக்கும், பெண்களுக்கு சமஅதிகாரமளிக்கும் மற்றும் எதிர்காலத்தில் சமத்துவத்தினை உருவாக்கும். தில்லியின் ஏழு தொகுதிகளிலும் காங்கிரஸ் மற்றும் இந்தியா கூட்டணியின் வேட்பாளர்களை பெரும்பான்மையான வாக்குகளுடன் வெற்றிபெறச் செய்யுங்கள். ஜெய் ஹிந்த்!” என்று கூறியுள்ளார்.
6ஆம் கட்ட மக்களவைத் தேர்தல் மே மாத இறுதியில் நடைபெறவிருப்பதால், தேர்தல் பிரசாரம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இந்த 6ஆம் கட்டத் தேர்தலில் மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது. தில்லியில் 7 தொகுதிகள், பிகாரில் 8 தொகுதிகள், ஹரியாணாவில் 10 தொகுதிகள், ஜார்க்கண்டில் 4 தொகுதிகள், ஒரிசாவில் 6 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள் மற்றும் ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக்-ரஜௌரியில் 3ஆம் கட்டத்தில் ஒத்திவைக்கப்பட்ட வாக்குப்பதிவு உட்பட 58 தொகுதிகளுக்கும் 6ஆம் கட்டத்தின்போது தேர்தல் நடைபெறவுள்ளது.