திமுக தலைவரும் இந்தியாவின் பழுத்த அரசியல் தலவைர்களில் ஒருவருமான கலைஞர் கருணாநிதி 11 நாட்கள் மருத்துவமனை வாசத்தின் பின் இன்று மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனளிக்காமல் உயிரிழந்தார்.
அதைத் தொடர்ந்து கலைஞரின் பூத உடலை மெரினா கடற்கரையில் அண்ணா நினவிடத்தில் நல்லடக்கம் செய்வதற்கான கோரிக்கையை திமுக செயல்டலைவர் ஸ்டாலின், ராஜ்ய சபா உறுப்பினர் கனிமொழி, துரைமுருகன் உள்ளிட்டோர் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியைச் நேரில் சந்தித்து அளித்திருந்தனர். ஆயினும் மெரினாவில் நினைவிடம் அமைப்பதற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளைக் காரணம் காட்டி திமுகவின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்திருந்தது.
இந்நிலையில் திமுக தரப்பு தங்களது கோரிக்கையுடன் உயர்நீதிமன்றத்தை அணுகிய நிலையில்... திமுகவின் வழக்கை உயர்நீதிமன்றம் அவசரகால வழக்காகக் கருதி விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. அதையொட்டி நடைபெற்ற வழக்கு விசாரணையில் பொறுப்பு நீதிபதி குலுவாடியா ரமேஷ் தலைமையில் அரசு தரப்பு வழக்கறிஞர்களாக மூத்த வழக்குரைஞர்கள் சி.எஸ், வைத்யநாதன், ராஜகோபாலன் உள்ளிட்டோரும், திமுக சார்பாக மூத்த வழக்கறிஞர்கள் வில்சன், சரவணன், இளங்கோ உள்ளிட்டோரும் ஆஜரானார்கள். நீதிபதியின் இல்லத்திலேயே நடைபெற்ற இந்த வழக்கு விசாரணையின் தீர்ப்பு நாளைக்காலை 8.30 மணியளவில் வழங்கப்படும் என உயர்நீதிமன்றம் தற்போது அறிவித்துள்ளது. தமிழக அரசு காலை 8 மணிக்கு பதிலளித்த உடன் 8. 30 மணிக்கு தீர்ப்பு வழங்கப்படும் : உயர்நீதிமன்றம்.