பாகூர்: மத்திய உள்துறை அமைச்சரும் பாரதிய ஜனதா கட்சியின் தலைவருமான அமித் ஷா திங்கள்கிழமை முக்கியமான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். ஜார்கண்ட், பாகூரில் ஒரு பொதுப் பேரணியில் உரையாற்றிய அமித் ஷா, நான்கு மாதங்களில் அயோத்தியில் வானுயர ராமர் கோயில் கட்டப்படும் என்று அறிவித்தார்.
கடந்த நவம்பர் 9 ம் தேதி ராமர் கோயிலுக்கு ஆதரவாக உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது.
"உச்சநீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கியுள்ள நிலையில், இன்னும், நான்கு மாதங்களுக்குள், அயோத்தியில் வானுயர ராமர் கோயில் கட்டப்படும்" என்று அமித் ஷா கூறினார்.
அயோத்தி தகராறு வழக்கில் நவம்பர் 9 அன்று அளிக்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மறுஆய்வு மனுக்களை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்த நான்கு நாட்களுக்குப் பின்னர் உள்துறை அமைச்சரின் அறிவிப்பு வெளிவந்திருக்கிறது.
‘தனியறை விசாரணையில் மறுஆய்வு மனுக்களை பட்டியலிடுவதற்கான விண்ணப்பங்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன. மறுஆய்வு மனுக்கள் மற்றும் அதனுடன் இணைக்கப்பட்ட ஆவணங்களை நாங்கள் கவனமாகப் பரிசீலித்து விட்டோம். அவர்களது குற்றச்சாட்டை அப்படியே கணக்கில் எடுத்துக் கொள்ள எந்த முகாந்திரமும் இல்லை எனும் அடிப்படையில் மறுஆய்வு மனுக்கள் தள்ளுபடி செய்யப்படுகின்றன.’ என்று ஐந்து நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் கூறியது.
நவம்பர் 9 அன்று அளித்த தீர்ப்பில் ராமர் கோயில் கட்டுவதற்கு சர்ச்சைக்குரிய நிலத்தின் ஒருபகுதியை உச்சநீதிமன்றம் ஒதுக்கியதுடன், அயோத்தியில் மசூதி ஒன்றைக் கட்டிக் கொள்ள ஐந்து ஏக்கர் மாற்று நிலத்தை முஸ்லிம் தரப்புக்கு வழங்கவும் முடிவு செய்திருந்தது.
அதையொட்டி நவம்பர் 9 தீர்ப்பை எதிர்த்து மொத்தம் 18 மறுஆய்வு மனுக்கள் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத் தக்கது.
சிவில் சர்வீஸ் போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் முக்கியமான வினாக்களில் ஒன்றாக இனி இதுவும் அமையலாம்!
பாஸ்போர்ட்டில் தாமரை ஏன்? வெளியுறவு அமைச்சகத்தின் விளக்கம்!
தமிழக முதல்வரின் இமேஜ் குறித்த நடிகர் ரஜினியின் கருத்துக்கு‘ரோஜா’அளித்த பதில்!
அயோத்தியில் ராமர் கோயில் வேண்டுமென இவர்கள் எல்லாம் போராடவில்லையே ஏன்?