இன்று அதிகாலை 3.30 மணியளவில் இந்தியா, பாகிஸ்தான் எல்லைப்புறத்தை ஒட்டி இருப்பிடங்களை அமைத்து செயல்பட்டுக் கொண்டிருந்த பயங்கரவாத முகாம்களின் மீது இந்திய ராணுவம் தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் ஃபிப்ரவரி 14 ஆம் நாள் ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத அமைப்பினர் காஷ்மீர், புல்வாமாவில் நிகழ்த்திய பயங்கரவாதத் தாக்குதலுக்கான பதிலடி என இந்திய அரசு அறிவித்திருக்கிறது. ஃபிப்ரவரி 14 ஆம் நாள் காஷ்மீர், புல்வாமாவில் விடுமுறை முடிந்து பணிக்குத் திரும்பிக் கொண்டிருந்த 40 சி ஆர் பி எஃப் வீரர்கள் பயணித்த பேருந்தின் மீது வெடிமருந்துகள் நிரம்பிய காரை ஏற்றி மோதி வெடிக்கச் செய்து மாபெரும் உயிரிழப்பை ஏற்படுத்தியது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத அமைப்பு. இதில் பேருந்தில் பயணித்த 40 வீரர்களும் மரணித்தனர். அதில் தமிழகத்தைச் சேர்ந்த வீரர்களும் இருவரும் அடக்கம். இந்த பயங்கரவாதத் தாக்குதலால் தன் நெஞ்சில் தீ எரிந்து கொண்டிருப்பதாகவும் உரிய வகையில் வெகு விரைவில் இதற்கான பதிலடியை இந்திய ராணுவம் அளிக்கும் எனவும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.
அவ்வகையில் பாக் எல்லையை ஒட்டிய பயங்கரவாத முகாம்களின் மீது இன்று நடத்தப்பட்ட தாக்குதலை தகுந்த பதிலடியாக இந்திய ராணுவம் அறிவித்திருக்கிறது. இந்தத் தாக்குதலுக்கு மிராஜ் 2000 ரக போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன.
மிராஜ் 2000 என்பவை ஃபிரான்ஸ் நாட்டில் தயாராகி உலகம் முழுதும் பல்வேறு நாடுகளுக்கு விற்பனையாகிக் கொண்டிருக்கும் போர் விமானங்களாகும். இதைத் தயாரிப்பது ஃப்ரான்ஸைச் சார்ந்த டஸ்ஸால்ட் ஏவியேஸன் நிறுவனம். இது ஒற்றை இயந்திரச் சக்தி கொண்ட 4 ஆம் தலைமுறை போர் விமானமாக அடையாளப் படுத்தப்படுகிறது. ஆரம்பத்தில் இவ்வகை போர்விமானங்கள் 1970 களின் பிற்பகுதியில் மிராஜ் 3 எனும் பெயரில் அறிமுகப்படுத்தப் பட்டு அவற்றுக்கு கிடைத்த உலகளாவிய வரவேற்பின் பின் அவற்றையே முன்மாதிரியாகக் கொண்டு மிராஜ் 2000 N, மிராஜ் 2000 D போன்ற தாக்குதல் போர் விமானங்களும், மிராஜ் 2000-5 போன்ற மேம்படுத்தப்பட்ட போர் விமானங்களும் உருவாக்கப்பட்டன. 2006 ஆம் ஆண்டு நிலவரப்படி பார்த்தால் இன்று உலகெங்கும் சுமார் 600 க்கும் மேற்பட்ட மிராஜ் 2000 ரக போர்விமானங்கள் உலகெங்கும் 9 நாடுகளில் பயன்பாட்டில் இருப்பது தெரிய வருகிறது.
மிராஜ் 2000 போர் விமானத்தில் அதன் கட்டுப்படுத்தக்கூடிய புதிய நுட்பங்கள், எதிரி விமானங்களை வெகு விரைவில் கண்டுகொள்ளும் உணர்வுக் கருவிகள், கணினி அமைப்புகள், மிகத் துல்லிமான இலக்கை குறிவைக்கும் அமைப்புகள், ஆயுதங்களை தாங்கிச் செல்லக்கூடிய திறன் ஆகியவற்றை மேம்படுத்துவதன் மூலம் அதனை மேலும் 20 ஆண்டுகளுக்கு சிறப்பாக பயன்படுத்த முடியும் என்று இந்திய விமானப் படை நம்புகிறது.
போர்க்குற்ற விசாரணை நடத்த இலங்கை மறுப்பு: இந்தியா என்ன செய்யப் போகிறது?
எல்லையில் போர் பதற்றம்: போர் விமானங்கள் - வீர்ர்கள் குவிப்பு
பதிலடி ஆரம்பம்: ஒருபக்கம் அதிரடித் தாக்குதல்; மற்றொரு பக்கம் பிரிவினைவாதத் தலைவர்களுக்கு செக்!
பாகிஸ்தான் பயங்கரவாத முகாம் அழிப்பு: 300 பேர் பலி - இந்திய ராணுவம் தகவல்!
எல்லைப் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள் அழிப்பு: ராகுல், கேஜரிவால் பாராட்டு