புதுதில்லி: புல்வாமாவில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக எல்லைப் பகுதியில் பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இந்திய விமானப்படை தாக்குதல் நடத்தி அழித்துள்ளது. இந்த தாக்குதலில் 200 முதல் 300 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என இந்திய ராணுவம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
ஜம்மு-காஷ்மீர் மாநிலம் எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியில் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பாலக்கோட் பகுதியில் செயல்பட்டும் வரும் ஜெய்ஷ்-ஏ- முகமது பயங்கரவாதிகள் முகாம்கள் மீது இன்று அதிகாலை 3.30 மணிக்கு இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் மூலம் இந்திய ராணுவம் வெடிகுண்டுகளை வீசி முற்றிலுமாக தகர்த்துள்ளது.
இந்திய விமானப்படை பயங்கரவாதிகளின் முகாம்ங்களை தாக்கி அழிப்பதற்காக 1000 கிலோ எடையுள்ள வெடிபொருள் வீசப்பட்டதாகவும், இந்த தாக்குதலுக்கு போர் விமானம் மிராஜ் 2000 விமானங்கள் 12 பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், 4 முகாம்கள் அழிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சர்ஜிக்கல் தாக்குதல் முறையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் பாகிஸ்தான் தரப்பை சேர்ந்த பயங்கரவாதிகள் 200 முதல் 300 பேர் வரை கொல்லப்பட்டிருக்கலாம் என இந்தியா ராணுவம் தகவல் வெளியிட்டுள்ளது. எல்லோருமே ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாத அமைப்பை சேர்ந்தவர்கள் என தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான் மறுப்பு: இந்தியா தாக்குதல் நடத்தியதை ஒப்புகொண்டுள்ள பாகிஸ்தான், யாரும் பலியாகவில்லை என்று தெரிவித்துள்ளது.
தாக்குதல் நடத்தப்பட்ட முசாபராபாத் ஜெய்ஷ்- இ- முகமது பயங்கரவாத அமைப்புக்கு மிகவும் வலுவாக இருந்த இடம் என்பது குறிப்பிடத்தக்கது.