மூன்று மசோதாக்கள் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப். 17) நடைபெறும்! - ஓம் பிர்லாதொகுதி மறுவரையறை மசோதா! ராகுலுடன் மு.க. ஸ்டாலின் ஆலோசனை! தொகுதி மறுவரையறையால் தமிழ்நாட்டுக்குப் பாதிப்பில்லை! இபிஎஸ் பேச்சுமக்களவையில் தொகுதி மறுவரையறை, மகளிர் இடஒதுக்கீடு திருத்த மசோதாக்கள் தாக்கல்! தொகுதி மறுவரையறை கூடாது! 2023 மகளிர் இடஒதுக்கீடு மசோதாவுக்கு ஆதரவு! - டி.ஆர். பாலு ஆதவ் அர்ஜுனா வேட்புமனுவுக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் வழக்கு! எதிர்ப்புத் தீ பரவட்டும்.. பாஜகவின் ஆணவம் வீழட்டும்! - ஸ்டாலின்
/

ஸ்டெர்லைட் வழக்கு கடந்து வந்த பாதை

ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுடி செய்து ஆலையைத் திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

News image

ஸ்டெர்லைட் வழக்கு கடந்து வந்த பாதை

Updated On :18 ஆகஸ்ட் 2020, 5:48 am

தூத்துக்குடியில் அமைக்கப்பட்டுள்ள ஸ்டெர்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுடி செய்து ஆலையைத் திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என சென்னை உயர் நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தில் அமைய வேண்டிய ஸ்டெர்லைட் ஆலை தூத்துக்குடியில் அமைக்கப்பட்டது முதல், இன்று ஆலையை திறக்க தமிழக அரசு விதித்த தடை தொடரும் என்று சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்திருக்கும் தீர்ப்பு வரை... 

ஸ்டெர்லைட் வழக்கு கடந்த வந்த பாதை...

  • கடந்த 1993-ஆம் ஆண்டு மகாராஷ்டிர மாநிலம் ரத்னகிரி மாவட்டத்தில் ஸ்டெர்லைட் ஆலையை அமைக்க  முடிவு எடுக்கப்பட்டது. ஆலை அமைக்க கடுமையான எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.
     
  • இதனையடுத்து  1994 ஆம் ஆண்டில் தூத்துக்குடியில் ஆலையை அமைக்க தமிழக அரசு அனுமதி வழங்கியது.
     
  • ஆலை அமைக்கப்பட்ட பின்னர், அந்த பகுதியில் வசித்தவர்களுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டது. சுத்தமான சுற்றுச்சூழலுக்கான தேசிய அறக்கட்டளை என்ற அமைப்பு 1996 ஆம் ஆண்டில் தொடர்ந்த வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுபடி 1998 ஆம் ஆண்டில் நீரி என்ற தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் ஸ்டெர்லைட் ஆலையை ஆய்வு செய்து அளித்த அறிக்கையில் நிலத்தடி நீர், காற்று மாசு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
     
  • கடந்த 1998-ஆம் ஆண்டு நவம்பரில் முதன் முதலாக ஆலையை மூட சென்னை உயர் நீதிமன்றம்  உத்தரவிட்டது. பின்னர் உச்ச நீதிமன்றம், ஆலை இயங்க அனுமதித்தது.
     
  • 2010-ஆம் ஆண்டு செப்டம்பரில் சட்ட விதிமீறல்களை சுட்டிக்காட்டி ஆலையை மூடும்படி சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டது. அடுத்த மூன்று நாள்களில் சென்னை உயர் நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை விதித்தது.
     
  • 2013-ஆம் ஆண்டு  மார்ச் மாதம் விஷ வாயு கசிவு காரணமாக ஆலை மூடப்பட்டது. தூத்துக்குடியில் ஏற்படுத்திய மாசுவால் பாதிக்கப்பட்டவர்கள், சுற்றுச்சூழல் பாதிப்புக்கு இழப்பீடாக ரூ.100 கோடி வழங்க ஸ்டெர்லைட் ஆலைக்கு உச்ச நீதிமன்றம் கடந்த 2013-ஆம் ஆண்டு ஏப்ரல்  மாதம் உத்தரவிட்டது.
     
  • 2018-ஆம் ஆண்டு மே 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 13 பேர் பலியாகினர்.
     
  • 2018-ஆம் ஆண்டு மே 28-ஆம் தேதி காற்று, நீர் மாசு ஏற்படுத்தியதாக ஸ்டெர்லைட் ஆலையை மூட தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியமும், தமிழக அரசும் உத்தரவிட்டது. அரசு உத்தரவை எதிர்த்து ஸ்டெர்லைட் நிறுவனம் தாக்கல் செய்த வழக்கை விசாரித்த தேசிய பசுமைத் தீர்ப்பாயம், ஓய்வு பெற்ற நீதிபதி தருண் அகர்வால் தலைமையில் குழு அமைத்து ஆய்வு மேற்கொண்டு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.
  • ஸ்டெர்லைட் ஆலையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை என்ற தருண் அகர்வாலின் அறிக்கைப்படி  ஆலையை திறக்க பசுமை தீர்ப்பாயம் அனுமதியளித்தது. 
     
  • தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. அதேபோல ஆலையை திறக்க அனுமதி கோரி ஸ்டெர்லைட் நிர்வாகமும் மனுத்தாக்கல் செய்தது.
     
  • உச்ச நீதிமன்றம், ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறக்க தடை விதித்ததுடன், வழக்கை  விசாரிக்க தேசிய பசுமை தீர்ப்பாயத்துக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி,  சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக, வேதாந்தா நிறுவனத்துக்கு அறிவுறுத்தியது.
     
  • 2019-ஆம் ஆண்டு பிப்ரவரி 27-ஆம் தேதி உச்ச நீதிமன்ற உத்தரவின்படி, ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வேதாந்தா நிறுவனம் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
     
  • 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்த வழக்குகளை விசாரிக்க நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம் மற்றும் பவானி சுப்பராயன் அடங்கிய சிறப்பு அமர்வை அமைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
     
  • 2019-ஆம் ஆண்டு ஜூன் 27-ஆம் தேதி முதல் சிறப்பு அமர்வில் வழக்கு விசாரணை துவங்கியது. 39 நாள்கள் விசாரணைக்கு பின், 2020-ஆம் ஆண்டு ஜனவரி 8-ம் தேதி இந்த வழக்கின் தீர்ப்பு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது.
     
  • இன்று 2020-ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ஆம் தேதி, வழக்கை விசாரித்து வந்த நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், பவானி சுப்பராயன் பிறப்பித்த உத்தரவில், ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த மனுவை தள்ளுடி செய்து ஆலையைத் திறக்க விதிக்கப்பட்டுள்ள தடை தொடரும் என தீர்ப்பளித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.