
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற விழாவில் இன்று தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்புத் துறை சார்பிலான பல்வேறு திட்டங்களை முதல்வர் மு.க. ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.
விழாவில் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பில் 200 நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளையும் (வேன்களையும்) ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.
தமிழ்நாடு அரசு சார்பிலான இந்த வேன்கள் அனைத்திலும் முதல்வர் மு.க. ஸ்டாலின் படத்துடன் அலங்கரிக்கப்பட்ட ஒரு மாட்டுக்கு பிரதமர் நரேந்திர மோடி உணவளிக்கும் படமும் இடம் பெற்றிருக்கிறது.
ஏற்கெனவே, மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பங்கேற்ற மறைந்த முன்னாள் முதல்வர் மு. கருணாநிதி நினைவு நாணயத் திறப்பு விழா தொடர்பாக - திமுகவும் பாரதிய ஜனதாவும் நெருங்கிவருவதாக - சர்ச்சைகள் நிலவிவருகின்றன.
திமுகவுக்கும் பாரதிய ஜனதாவுக்கும் ரகசிய உறவு இருப்பதாக அதிமுக பொதுச்செயலர் எடப்பாடி பழனிசாமி போன்றோர் குற்றம் சாட்டினர். அவ்வாறெல்லாம் இல்லை; பரஸ்பர மரியாதையே என்று திருமண நிகழ்ச்சியொன்றில் மு.க. ஸ்டாலினும் மறுத்திருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில் இன்று தொடக்கிவைக்கப்பட்டுத் தமிழ்நாடு முழுவதும் இயங்கவுள்ள தமிழ்நாடு அரசின் நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகளில் மு.க. ஸ்டாலின் படத்துடன் பிரதமர் மோடியின் படமும் இடம் பெற்றிருக்கிறது.
இந்த நடமாடும் கால்நடை மருத்துவ ஊர்திகள் திட்டத்திற்கு மத்திய அரசுதான் நிதி ஒதுக்கியுள்ளதாகவும் திட்டத்தை நடைமுறைப்படுத்தும் செலவிலும் ஒரு பகுதியை மத்திய அரசு வழங்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.