
தென்னரசுவில் ஆரம்பித்து ஆம்ஸ்ட்ராங் வரை...
சென்னையில் வெள்ளிக்கிழமை இரவு பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டிக் கொலை செய்யப்பட்டதற்குக் காரணம் ஏற்கெனவே தொடர்ச்சியாக நடந்துவரும் கொலைகளே எனக் கூறப்படுகிறது.
ஆம்ஸ்ட்ராங் கொல்லப்பட்ட சில மணி நேரங்களில், கடந்த வருடம் படுகொலை செய்யப்பட்ட பிரபல ரௌடி ஆற்காடு சுரேஷ் என்பவரின் தம்பியான பொன்னை பாலு, அவருடைய நண்பர்களான ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் உள்ளிட்ட 8 பேர் அண்ணா நகர் காவல் நிலையத்தில் சரணடைந்தனர்.
மேலும், விசாரணையில் கடந்தாண்டு பட்டினம்பக்கத்தில் படுகொலை செய்யப்பட்ட ஆற்காடு சுரேஷினுடைய தம்பியான பொன்னை பாலு, தன் அண்ணனின் கொலைக்குப் பழிவாங்குவதற்காக ஆம்ஸ்ட்ராங்கைக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.
தென்னரசு கொலை
பகுஜன் சமாஜ் கட்சியின் வடசென்னை மாவட்டச் செயலாளரும் ஆம்ஸ்ட்ராங்கின் நெருங்கிய நண்பருமான ரௌடி பாம் சரவணனின் தம்பியான தென்னரசு என்பவரை, 2015 ஆம் ஆண்டு பிப்ரவரி 5 ஆம் தேதி திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம் கூட்டு ரோடு அருகே ஆற்காடு சுரேஷின் ஆதரவாளர்கள் கொலை செய்துள்ளனர்.
ரௌடி ஆற்காடு சுரேஷ் கொலை
கட்டப் பஞ்சாயத்து, ஆள்கடத்தல், மிரட்டல் என வலம் வந்த, 15 முறை குண்டர் தடுப்புச் சட்டத்தில் அடைக்கப்பட்ட புளியந்தோப்பு கூலிப்படையைச் சேர்ந்த ஆற்காடு சுரேஷ், விசாரணை முடிந்து வீட்டிற்கும் செல்லும்போது கடந்த 2023 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி, பட்டினம்பாக்கம் சர்வீஸ் சாலையில் தென்னரசுவின் கொலைக்குப் பழிக்குப் பழியாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார்.
ஆற்காடு சுரேஷுடன் இருந்த ரௌடி மாதவனுக்கும் வெட்டு விழுந்தது. ஆனால், வெட்டுக் காயங்களுடன் உயிர் தப்பினார் மாதவன்.
ஆற்காடு சுரேஷ் கொலையில் சம்பந்தப்பட்ட அரக்கோணத்தைச் சேர்ந்த மோகன், ஜெயபால், சைதை சந்துரு, யமஹா மணி , நெல்லை ராமையன்பட்டியைச் சேர்ந்த செந்தில்குமார், முத்துக்குமார், நவீன், போஸ், சுரேஷ், கன்னியாகுமரியைச் சேர்ந்த எட்வின், சென்னை ஆயிரம்விளக்கு அதிமுக வட்டச் செயலாளர் சுதாகர், மற்றொரு அதிமுக நிர்வாகி ஜான் கென்னடி உள்ளிட்ட 13 பேர் கைது செய்யப்பட்டனர்.
இவர்களில் எட்டு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டம் பாய்ந்தது.
உயிர் தப்பிய மாதவனுக்கு மீண்டும் ‘ஸ்கெட்ச்’
ஆற்காடு சுரேஷ் கொலையின்போது உயிர் தப்பிய சுரேஷின் நண்பர் மாது என்ற பாக்ஸர் மாதவனை ஜாம் பஜாரில் உள்ள அவரது வீட்டின் அருகே கடந்த ஜனவரி மாதம் 13 ஆம் அடையாளம் தெரியாத ஒரு கும்பல் கொலை செய்தது.
ஆற்காடு சுரேஷ் கொலையில், ஆம்ஸ்ட்ராங் உடந்தையாக இருந்ததாகவும், அவர் உதவியில் தான் கொலை நடந்ததாகவும் அப்போது குற்றச்சாட்டு எழுந்தது.
அந்த வழக்கில் ஆம்ஸ்ட்ராங் பெயர் சேர்க்கப்படாததால், ஆம்ஸ்ட்ராங் மற்றும் சுரேஷின் உடன் பிறந்த தம்பி பொன்னை பாலு தரப்பினருக்கும் முன்விரோதம் தொடர்ந்து வந்துள்ளது.
இந்த நிலையில்தான் ஆற்காடு சுரேஷ் கொல்லப்பட்டு ஒரு ஆண்டுக்குள் ஆம்ஸ்ட்ராங் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
ஆற்காடு சுரேஷ் கொலைக்கு மாதவன் சாட்சியாக இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நண்பரின் தம்பியைக் கொன்றவர்களை வைத்தே ஆம்ஸ்ட்ராங்கை கொன்ற பொன்னை பாலு
போலீஸாரால் கைது செய்யப்பட்ட சுரேஷின் தம்பி இதுகுறித்து கூறும்போது, “எனது அண்ணனைக் கொலை செய்தது மட்டுமில்லாமல், என்னையும், ஜெயபாலையும் ஆம்ஸ்ட்ராங் தரப்பினர் மிரட்டியதால் எனது மனைவி பயத்தில் பிரிந்து சென்றுவிட்டார். இப்போது அண்ணனும் இல்லை, எனது மனைவியும் இல்லை. இதனால், அவர்கள் என்னைக் கொல்வதற்கு முன்பாக அவரை கொன்றுவிட வேண்டும் என்று முடிவு செய்தேன். அதற்காகவே ஆம்ஸ்ட்ராங் நண்பரின் தம்பி தென்னரசு கொலை வழக்கில் என்னோடு சிறையில் இருந்தவர்களை சேர்ந்து ஆம்ஸ்ட்ராங்கைக் கொலை செய்தேன்” என வாக்கு மூலத்தில் தெரிவித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
யார் இந்த ஆம்ஸ்ட்ராங்?
வழக்குரைஞராக இருந்து அரசியல் பயணத்தை மேற்கொண்ட 54 வயதான ஆம்ஸ்ட்ராங், சென்னை செம்பியம் பகுதியைச் சோ்ந்தவர். கடந்த 2000 ஆம் ஆண்டுமுதல் தீவிர அரசியலில் ஈடுபடத் தொடங்கினாா். வழக்குரைஞராக இருந்தபோது அவா், அடிதடி, தகராறு உள்ளிட்ட பிரச்னைகளில் ஈடுபட்டு வந்ததாக காவல் துறை தரப்பில் கூறப்படுகிறது.
இதுதொடா்பான பல்வேறு வழக்குகளும் ஆம்ஸ்ட்ராங் மீது இருந்துள்ளன.
கடந்த 2006-ஆம் ஆண்டு சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினராக தோ்ந்தெடுக்கப்பட்டாா். கடந்த 2008-ஆம் ஆண்டு சென்னை அமைந்தகரையில் புல்லா ரெட்டி அவென்யூவில் பகுஜன் சமாஜ் தலைவா் மாயாவதி தலைமையில் பிரமாண்ட கூட்டத்தை நடத்தி அனைவரது கவனத்தையும் ஈா்த்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.