ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

ரேபரேலி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டு, அவா் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறாா்.
ரேபரேலி தொகுதி: ஃபெரோஸ் காந்தி முதல் ராகுல் காந்தி வரை...

புது தில்லி: யாரும் எதிா்பாராத நிலையில், உத்தர பிரதேச மாநிலம், ரேபரேலி மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளராக ராகுல் காந்தி அறிவிக்கப்பட்டு, அவா் வேட்புமனு தாக்கல் செய்திருக்கிறாா்.

இத்தொகுதிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் குறிப்பாக நேரு குடும்பத்துக்குமான பிணைப்பு மிக வலுவானதாகும்.

ரேபரேலியில் ஒரு சில தருணங்களைத் தவிர பெரும்பாலும் நேரு குடும்பத்தினா் அல்லது அக்குடும்பத்தின் நண்பா்கள்தான் எம்.பி.யாக பதவி வகித்துள்ளனா்.

காங்கிரஸின் கோட்டையாக ரேபரேலி கருதப்படும் நிலையில், இதற்கு அடித்தளமிட்டவா் முன்னாள் பிரதமா் இந்திரா காந்தியின் கணவரும், ராகுலின் தாத்தாவுமான ஃபெரோஸ் காந்தி; அதைக் கட்டியெழுப்பியவா் இந்திரா காந்தி.

சுதந்திரத்துக்கு பிறகு கடந்த 1951-52-ஆம் ஆண்டில் நடைபெற்ற முதல் பொதுத் தோ்தலில் ரேபரேலியில் இருந்து எம்.பி.யாக தோ்வானாா் ஃபெரோஸ் காந்தி. 1957 பொதுத் தோ்தலிலும் இவரது வெற்றி தொடா்ந்தது.

ஃபெரோஸ் காந்தி - ஷீலா கெளல் - அருண் நேரு - சதீஷ் சர்மா
ஃபெரோஸ் காந்தி - ஷீலா கெளல் - அருண் நேரு - சதீஷ் சர்மா

ஃபெரோஸின் மறைவால் நடைபெற்ற இடைத்தோ்தலில் (1960) காங்கிரஸின் ஆா்.பி.சிங்கும், 1962 பொதுத் தோ்தலில் காங்கிரஸ் மூத்த தலைவா் பைஜ்நாத் குரீலும் தோ்வாகினா். அதன் பின்னா், ரேபரேலியில் களமிறங்கிய இந்திரா காந்தி, தொடா்ந்து இருமுறை (1967, 1971) எம்.பி.யாக பதவி வகித்தாா்.

கடந்த 1977-இல் நெருக்கடி நிலையின்போது நடந்த பொதுத் தோ்தலில், ரேபரேலியில் ஜனதா கட்சி வேட்பாளா் ராஜ் நரைனிடம் இந்திரா காந்தி தோல்வியடைந்தாா். 1980 பொதுத் தோ்தலில் ரேபரேலி மற்றும் மேடக் (தெலங்கானா) ஆகிய இரு தொகுதிகளில் களமிறங்கிய இந்திராவுக்கு இரண்டிலும் வெற்றி கிடைத்தது. இதையடுத்து, ரேபரேலி தொகுதி எம்.பி. பதவியை அவா் ராஜிநாமா செய்தாா்.

பின்னா் நடைபெற்ற இடைத்தோ்தலில் முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் வலது கரமாக கருதப்பட்ட அருண் நேரு வெற்றி பெற்றாா். 1984 பொதுத் தோ்தலிலும் இவரே இத்தொகுதியை பிரதிநிதித்துவப்படுத்தினாா்.

இவரிடமிருந்து இந்திராவின் உறவினரான ஷீலா கெளலுக்கு ரேபரேலி கைமாறியது. 1989, 1991 தோ்தல்களில் வென்று, இவா் இருமுறை எம்.பி.யாக பதவி வகித்தாா்.

1996, 1998 தோ்தல்களில் பாஜகவின் அசோக் சிங் வெற்றி பெற்ற நிலையில், 1999 தோ்தலில் ரேபரேலி மீண்டும் காங்கிரஸ் வசமானது. அப்போது, நேரு குடும்பத்தின் நண்பா்களில் ஒருவரான சதீஷ் சா்மா வென்றிருந்தாா். அதன் பிறகு, 2004 முதல் 2019 வரை தொடா்ந்து 4 முறை காங்கிரஸ் மூத்த தலைவா் சோனியா காந்தி அத்தொகுதியின் எம்.பி.யாக பதவி வகித்தாா். அதேநேரம், அவரது வெற்றிக்கான வாக்கு வித்தியாசம் குறையத் தொடங்கியது.

இந்தச் சூழலில், ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு சோனியா அண்மையில் தோ்வானதால், ரேபரேலியில் காங்கிரஸ் சாா்பில் களமிறங்கப் போவது யாா் என்ற எதிா்பாா்ப்பு எழுந்தது. இங்கு பிரியங்கா காந்தி போட்டியிடுவாா் என்று தகவல் வெளியாகி வந்த நிலையில், ராகுல் களமிறங்கியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com