நீ பற்ற வைத்த நெருப்பொன்று...

பிப்லப் ஹஸ்ரா (Biplab Hazra) என்பவர் எடுத்துள்ள இந்தப் புகைப்படத்தில் குட்டி யானையும் அதன் தாயும் தீ வைக்கப்பட்ட நிலையில் தங்கள் உயிர்களை காக்க ஓடுகின்றன. 
நீ பற்ற வைத்த நெருப்பொன்று...
Updated on
2 min read

பிப்லப் ஹஸ்ரா (Biplab Hazra) என்பவர் எடுத்துள்ள இந்தப் புகைப்படத்தில் குட்டி யானையும் அதன் தாயும் தீ வைக்கப்பட்ட நிலையில் தங்கள் உயிர்களை காக்க ஓடுகின்றன. மனத்தை கனக்கச் செய்யும் இந்தப் படம் சரணாலய வனவிலங்கு புகைப்பட விருதை வென்றுள்ளது. கானுயிர் பாதுகாப்பு மற்றும் சமுதாய ஈடுபாட்டை மையமாக்கிச் செயல்படும் மும்பையைச் சார்ந்த அரசு சார்பற்ற அமைப்பு (சான்சுவரி நேச்சர் பவுண்டேஷன்) இந்த விருதினை வழங்கியது. விருது அறிவித்த பத்திரிகை, 'இந்த வகையான மனித நேயமற்றச் செயல்....இங்கு வழக்கமானதுதான்’ என்று பதிவு செய்துள்ளது.

'நரகத் துளை' (‘Hell Hole’) எனப் பெயரிடப்பட்ட இந்தப் புகைப்படம் வனவிலங்குகளுக்கு எதிராக மனிதம் எந்த அளவுக்கு காலாவதியாகிக் கொண்டிருக்கிறது என்பதற்கான கண்கூடான சாட்சியாக உள்ளது. மேற்கு வங்காளத்தில் யானைகளுக்கும் மனிதர்களுக்குமான போராட்டம் அடிக்கடி நடந்தேறிக் கொண்டிருக்கிறது. பாங்குரா மாவட்டத்தில் எடுக்கப்பட்ட இந்தப் புகைப்படத்தில் இரண்டு யானைகள் மீதும் தார் குண்டுகள் மற்றும் பட்டாசுகளை எறிந்துள்ளனர், தீப்பற்றியுள்ள நிலையில் அவை தப்பிக்க முயல்கின்றன.

இத்தகைய கொடூரமான வன்செயலுக்குப் பின்னர் அந்த இரண்டு யானைகளுக்கு என்ன நடந்தது என்று தெளிவாக தெரியவில்லை. குட்டி யானை மட்டும் பிழைத்துள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன. ஹஸ்ராவின் இந்தப் புகைப்படம், முடிவற்ற யானைகள் மற்றும் மனிதர்களுக்கிடையே நிகழும் மோதலுக்கான ஆதாரம் ஆகும்.

மேற்கு வங்கத்தின் பாங்குரா மாவட்டத்தில் இத்தகைய செயல்கள் சர்வ சாதாரணமானது என்கிறனர் சான்சுவரி ஏஷியா பவுண்டேஷன் அமைப்பினர். ஆசியாவில் உள்ள யானைகளின் எண்ணிக்கையில் இந்தியாவில்தான் 70 சதவிகிதம் உள்ளது. ஆனால் நம்முடைய சக ஜீவிகளான வனவிலங்குகளை பாதுகாக்கவோ, பராமரிக்கவோ, இயலாதவர்களாகி, அவற்றை அழிக்கத் தொடங்குவது வெட்கக் கேடானச் செயல்.

இந்த ஆண்டு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் கிட்டத்தட்ட 84 யானைகள் கொல்லப்பட்டதாக சுற்றுச்சூழல் அமைச்சகம் தெரிவித்துள்ளது. யானைகள் பெரும்பாலும் தந்தங்களுக்காகத்தான் குறி வைக்கப்பட்டு கொல்லப்படுகின்றன. மனிதர்களின் கையில் சிக்கிய யானைகள் ஆண்டாண்டு காலமாக பலவகையான அழிவுகளுக்கு உள்ளாகி வருவது கொடும் நிஜம். இந்தப் புகைப்படத்தில் உள்ள காட்சி சுடும் நிஜமாகி மனதைப் பற்றி எரியச் செய்கிறது. சாது மிரண்டால் காடு கொள்ளாது என்பார்கள் இந்த யானைகள் மிரண்டால் தங்களது நிலை என்ன என்பதை மனிதர்கள் உணர வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com