பிரிட்டனில் கடந்த 24 மணி நேரத்தில் 684 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, கரோனா வைரஸுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை 3,645 ஆக உயர்ந்திருக்கிறது.
கரோனா தோன்றிய சீனாவில் நேரிட்ட பலி எண்ணிக்கையைவிடவும் இது 319 அதிகம் என்பது குறிப்பிடத் தக்கது. ஈரானில் இதைவிடக் குறைவானவர்களே (3,294) இறந்திருக்கின்றனர்.
வேறெந்த நாட்டையும்விட மிக அதிகளவாக இத்தாலியில்தான் 13,915 பேர் உயிரிழந்துள்ளனர்,
பிரிட்டனில் இதே நிலை நீடித்தால் ஈஸ்டர் காலத்தில் ஒவ்வொரு நாளும் ஆயிரம் மரணங்களைச் சந்திக்க நேரிடலாம் என்று நல்வாழ்வுத் துறை அமைச்சர் மேட் ஹான்காக் எச்சரித்துள்ளார்.
மேலும், நாட்டில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 33,718-லிருந்து 4450 அதிகரித்து 38,168 ஆக உயர்ந்துள்ளதாக நல்வாழ்வுத் துறையும் உறுதி செய்துள்ளது.
இந்த வார இறுதியைக் கொண்டாட யாரும் வெளியே செல்ல வேண்டாம் என்று நாட்டு மக்களுக்கு, தனிமைப்படுத்திக் கொண்டிருக்கும் பிரதமர் போரிஸ் ஜான்சன் அழைப்பு விடுத்துள்ளார்.
மோசமான இந்தச் சூழ்நிலையில், வரும் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒலிபரப்புவதற்காக ராணி எலிசபெத்தின் உரையொன்றும் பதிவு செய்யப்பட்டுள்ளது.