தெலுங்கானா: தெலங்கானாவில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என தெலங்கானா முதல்வர் அலுவலகம் விளக்கமளித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸ் நோய்த் தொற்று வேகமாக பரவிவரும் நிலையில், அதை தடுப்பதற்காக, நாடு முழுவதும் ஏப்ரல் 14 வரை ஊரடங்கு உத்தரவை அறிவித்தார் பிரதமர் மோடி.
இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தில் ஊரடங்கை ஜூன் 3 வரை நீட்டிப்பதாக திங்கள்கிழமை தகவல் வெளியானது.
இதையடுத்து, தெலங்கானா முதல்வர் அலுவலகம் இதுதொடர்பாக விளக்கமளித்ததாவது:
"தெலங்கானாவில் ஏப்ரல் 15-ஆம் தேதிக்குப் பிறகு இரண்டு வாரங்கள் ஊரடங்கை நீட்டிக்க முதல்வர் பரிந்துரைத்துள்ளார். இந்தியாவில் ஜூன் 3 வரை ஊரடங்கை நீட்டித்தால் நல்லது என்ற பிசிஜி அறிக்கையை மட்டுமே அவர் குறிப்பிட்டார். எனவே, ஊரடங்கு நீட்டிப்பு குறித்து எந்த அறிவிப்பும் வெளியிடப்படவில்லை" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.