புது தில்லி: தில்லியில் ஊரடங்கைத் தளர்த்துவது பற்றி ஏப்ரல் 30 ஆம் தேதிக்குப் பிறகே முடிவெடுக்கப்படும் என்று மாநில நல்வாழ்வுத் துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி விவாதிக்கப்பட்டு வருவதாகவும் என்ன முடிவெடுத்தாலும் ஏப்ரல் 30-க்குப் பிறகுதான் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், கரோனா பாதிக்கப்பட்டோருக்கு அளிக்கப்பட்ட பிளாஸ்மா சிகிச்சையில் நல்ல முடிவுகள் கிடைத்திருப்பதாகவும் ஊக்கமூட்டக் கூடியதாக இருப்பதாகவும் அமைச்சர் சத்யேந்தர் ஜெயின் தெரிவித்துள்ளார்.
தில்லியில் புதிதாக 138 பேருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் இதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 2,514 ஆக உயர்ந்துள்ளது, உயிரிழந்தோர் 53 பேர் என்றும் அவர் குறிப்பிட்டார்.