நகைப் பறிப்பு முயற்சி: அரிவாளைக் காட்டி தப்பிய கொள்ளையர்கள் (விடியோ)

திருநெல்வேலியில் நகைப்பறிக்க முயன்றபோது அதனை தடுக்க முயன்றவரை அரிவாளால் வெட்டுவது போல் மிரட்டி தப்பிய கொள்ளையர்களை காவல்துறையினர் தேடி வருகிறார்கள்.
நகைப் பறிப்பு முயற்சி: அரிவாளைக் காட்டி தப்பிய கொள்ளையர்கள் (விடியோ)
Updated on
1 min read


திருநெல்வேலி: திருநெல்வேலியில் நகைப் பறிக்க முயன்றபோது அதனைத் தடுக்க முயன்றவரை அரிவாளால் வெட்டுவது போல் மிரட்டி தப்பிய கொள்ளையர்களை காவல் துறையினர் தேடி வருகிறார்கள்.

திருநெல்வேலி பழையபேட்டை அருகேயுள்ள காந்திநகர் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் மனைவி செல்வரத்தினம்(57), தனது வீட்டின் வாசலில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) கோலமிட தயாரானாராம். அப்போது மோட்டார் சைக்கிளில் 3 மர்ம நபர்கள் வந்தனர். அதில் ஒருவன் மட்டும் இறங்கி செல்வரத்தினம் கழுத்தில் அணிந்திருந்த 9 பவுன் தங்கச் சங்கிலியைப் பறிக்க முயன்றானாம்.

ஆனால், செல்வரத்தினம் கெட்டியாகப் பிடித்துக் கொண்டதோடு, அவரது மகன் நடராஜன் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தாராம். இதனால் கொள்ளையர்கள் அங்கிருந்து சிறிது தொலைவு தப்பினர். அப்போது துரத்திச் சென்ற நடராஜனை, கொள்ளையர்கள் அரிவாளால் வெட்டுவது போல மிரட்டி மோட்டார் சைக்கிளில் தப்பினர். கொள்ளையர்கள் அரிவாளால் வெட்ட முயன்ற காட்சிகள் அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமிராக்களில் பதிவானது. அந்தக் காட்சிகள் சமூக ஊடகங்களில் பரவி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. 

இந்த நகைப் பறிப்பு முயற்சியில் ஈடுபட்டவர்கள் குறித்து திருநெல்வேலி நகரம் குற்றப்பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com