ஸ்ரீபெரும்புதூர்: கரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் எம்.எல்.ஏ. கே. பழனி நலம்பெற வேண்டி வெங்காடு பகுதியில் உள்ள சிவன் கோயிலில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஸ்ரீபெரும்புதூர் சட்டப்பேரவை உறுப்பினராக அதிமுகவை சேர்ந்த கே.பழனி உள்ளார். இந்த நிலையில் பழனிக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு கடந்த 10 நாள்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இந்நிலையில், எம்.எல்.ஏ. கே.பழனி விரைவில் நலம் பெற வேண்டி வெங்காடு அதிமுக சார்பில் வெங்காடு பகுதியில் உள்ள சிவன்கோயிலில் சிறப்பு பிரார்த்தனை மற்றும் அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
ஸ்ரீபெரும்புதூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கி தலைவர் வெங்காடு உலகநாதன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் வெங்காடு பகுதியை சேர்ந்த அதிமுகவினர் மற்றும் பொது மக்கள் கலந்துக்கொண்டு பழனி நலம் பெறவேண்டி பிரார்த்தனை செய்தனர். இதில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.