ராமேசுவரம்: ராமேசுவரத்தில் இருந்து மீன்பிடிக்க சென்று படகு மூழ்கி உயிரிழந்த மூன்று மீனவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணத்தை ராமநாதபுரம் எம்.பி, நவாஸ்கனி செவ்வாய்கிழமை வழங்கினார்.
மீன்பிடி தடைகாலம் முடிவடைந்து 13ஆம் தேதி சனிக்கிழமை 750க்கும் மேற்பட்ட விசைப்படகுளில் 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் மீன்வளத் துறை மீன்பிடி அனுமதி டோக்கன் பெற்று மீன்பிடிக்க சென்றனர். சென்ற ஞாயிற்றுகிழமை காலையில் விசைப்படகுகள் கரை திரும்பிய நிலையில் ஹெட்டோ என்பவரது விசைப்படகு மட்டும் கரை திரும்பவில்லை.
அதில் மலர் வண்ணன்(55), ரெஜின்பாஸ்கர்(43), ஆஸ்டின்(19) (என்ற) சுஜிந்திரா, ஜேசு(60) ஆகிய நான்கு மீனவர்கள் கடலுக்குச் சென்றிருந்தனர். அந்த விசைப்படகு காற்றில் சிக்கி, அதனுள் கடல் நீர் புகுந்து நான்கு பேரும் கடலில் மூழ்கினர்.
இதில் ஜேசு என்ற மீனவரை மட்டும் மீனவர்கள் மீட்டனர். மீதமுள்ள மூன்று மீனவர்கள் சடலமாக மீட்கப்பட்டனர்.
இந்நிலையில், கடலில் மூழ்கி உயிரிழந்த மூன்று மீனவர்களின் குடும்பத்தினரை ராமநாதபுரம் எம்,பி. நவாஸ்கனி நேரில் சென்று ஆறுதல் கூறினார். மேலும் அவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.25 ஆயிரம் நிவாரணமும் வழங்கினர்.
இதில் ராமநாதபுரம் மாவட்ட திமுக பொறுப்பாளர் காதர்பாட்ஷா, முத்து ராமலிங்கம், மண்டபம் ஒன்றிய செயலாளர் ஜீவானந்தம், ராமேசுவரம் நகர் செயலாளர் நாசர்கான், இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி மாநில பொருளாளர் ஷாஜகான் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.