அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் ஊரடங்கிற்கு முன் மக்கள் எதிர்ப்பால் மூடப்பட்ட மதுக்கடை தற்போது காவல்துறையின் பாதுகாப்புடன் திறக்கப்பட்டது.
அம்பாசமுத்திரம், பாபநாசம் சாலையில் கடந்த மார்ச் 18 இல் புதிதாக மதுக்கடை திறக்கப்பட்டது. இந்த நிலையில் அந்தப் பகுதி பொதுமக்கள் எதிர்த்ததையடுத்து மூடப்பட்டது. தொடர்ந்து கரோனா பரவல் தடுப்பால் பொது முடக்கம் நடைமுறைப்படுத்தப்பட்டதையடுத்து தமிழகம் முழுவதும் மதுக்கடைகள் அடைக்கப்பட்டன. இந்த நிலையில் மே 7 முதல் மதுக்கடைகளை திறக்க அரசு உத்தரவிட்டதையடுத்து அனைத்து மதுக்கடைகளும் திறக்கப்பட்டன. இவற்றுடன் மக்கள் எதிர்ப்பை மீறி மூடப்பட்ட அந்த மதுக்கடை வியாழக்கிழமை காலை திறக்கப்பட்டது. கடை திறந்ததையறிந்த அந்தப் பகுதி மக்கள் முன்னாள் காவல் அதிகாரி ஜான் நிக்கல்சன் தலைமையில் மதுக்கடையைத் திறக்க எதிர்ப்புத் தெரிவித்து திரண்டனர். அவர்களிடம் அம்பாசமுத்திரம் காவல் ஆய்வாளர் விஜயகுமார் அரசின் உரிய அனுமதி பெற்று இந்த கடை திறக்கப்பட்டுள்ளது. முறையாக நீதிமன்ற ஆணை பெற்று கடையை மூடும் நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள் என்று கூறியதை அடுத்து அனைவரும் கலைந்து சென்றனர். மேலும் காவல்துறையினர் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.