ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு தடை விதிக்கும் தமிழக அரசின் அவசரச் சட்டத்திற்கு மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
ஆன்லைன் சூதாட்ட விளையாட்டுகளில் இளைஞர்கள் ஈடுபட்டு தங்களது பணத்தை இழந்தபின் தற்கொலை செய்து கொள்வது அதிகரித்து வந்தது. இந்நிலையில் தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடைசெய்யக் கோரி பொதுமக்கள், எதிர்க்கட்சிகள் உள்ளிட்ட பல தரப்பினரும் கோரிக்கை விடுத்திருந்தனர்.
சென்னை உயர்நீதிமன்றம் ஆன்லைன் ரம்மியைத் தடை செய்வது தொடர்பாக பதிலளிக்குமாறு மத்திய மாநில அரசுகளுக்கு உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில் தமிழக அரசின் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணைய சூதாட்ட விளையாட்டுகளைத் தடை செய்யும் அவரச சட்டத்திற்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வெள்ளிக்கிழமை ஒப்புதல் அளித்தார்.
அவசர சட்டத்தின்படி, ஆன்லைன் ரம்மி விளையாட்டு அரங்கம் வைத்திருந்தால் ரூ.10000 அபராதமும் 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் விதிக்கப்படும். தடையை மீறி விளையாடினால் ரூ.5000 அபராதமும், 6 மாதம் சிறை தண்டனையும் வழங்கப்படும். மேலும் பணம் வைத்து விளையாடுவோரின் கணினி, செல்போன் மற்றும் அது தொடர்பான உபகரணங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.