பிரிட்டனில் கரோனா பாதிப்பால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள பிரதமர் போரிஸ் ஜான்சன், படுக்கையில் எழுந்து அமர்ந்ததாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்தன.
எனினும், வழக்கமான பணிகளுக்கு அவர் திரும்ப ஒரு மாதத்துக்கும் மேலாகக் கூடும் எனக் கூறப்படுகிறது.
லண்டனிலுள்ள செயின்ட் தாமஸ் மருத்துவமனயின் தீவிர சிகிச்சைப் பிரிவில் மூன்றாவது இரவைக் கழித்த அவருடைய உடல்நிலை சிகிச்சைக்கு நன்றாக ஒத்துழைக்கிறது.
டாக்டர்களுடன் பேசிய போரிஸ், அவர் திருமணம் செய்துகொள்ளவிருக்கும் தோழி கேரி சைமன்ட்ஸுக்கு மருத்துவப் பணியாளர்கள் மூலம் செய்தி அனுப்பியுள்ளார். ஏற்கெனவே, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவுடன் அவரிடமிருந்து செல்லிடப் பேசியை வாங்கிவிட்டனர்.
வாரக்கணக்கில், ஏன் மாதக்கணக்கில்கூட அவர் மீண்டும் பணிக்கு வராமல் இருக்கக் கூடும் என்றும் அவ்வாறுதான் மருத்துவர்கள் ஆலோசனை கூறியுள்ளார்கள் என்றும் பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.