வெள்ளக்கோவில்: திருப்பூர் மாவட்டம், வெள்ளக்கோவில் அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 3 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கோயமுத்தூர், வெள்ளலூர், அண்ணா நகரைச் சேர்ந்தவர் மயில்சாமி (39). இவர் தனது குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் 6 பேருடன் ஒரு காரில் வீட்டிலிருந்து புறப்பட்டு கும்பகோணம் கோவிலுக்குச் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது சனிக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் வெள்ளக்கோவில் அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஓலப்பாளையம் அருகே சாலையோரம் பழுதாகி நின்று கொண்டிருந்த லாரியின் பின்புறம் கார் மோதியது.
இதில், காரை ஓட்டி வந்த மயில்சாமி, இவருடைய மனைவி இந்து (37), உறவினர் கௌசல்யா (60) ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மயில்சாமி மகன் கௌதம் (13), ரம்யா (11), உறவினர் கலைவாணி ஆகியோர் காயங்களுடன் உயிர் தப்பினர். காயமடைந்த அனைவரும் திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
விபத்து குறித்து வெள்ளக்கோவில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.