

சென்னை: எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் குறி வைத்து ரூ.48 லட்சம் திருடப்பட்டது தொடா்பாக, ஹரியாணாவில் கொள்ளையர்களில் ஒருவரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். மற்றவர்களை தேடி வருகின்றனர்.
சென்னை வடபழனி, கீழ்ப்பாக்கம், விருகம்பாக்கம், வேளச்சேரி, தரமணி ஆகியப் பகுதிகளில் உள்ள எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் ஒரு கும்பல் நூதன முறையில் திருடியது.
இந்தக் கும்பல், எஸ்பிஐ ஏடிஎம் மையங்களில் உள்ள பணம் செலுத்தவும், எடுக்கவும் வசதியுள்ள இந்த வகை டெபாசிட் இயந்திரங்களில், ஏடிஎம் அட்டை மூலம் பணத்தை எடுக்க அதற்கான பொத்தான்களை அழுத்தும்போது பணம் வெளியே வரும். அப்போது, வெளியே வரும் பணத்தை எடுத்துக்கொண்டு, பணத்தை வெளி கொண்டு வரும் இயந்திரத்தின் வாயில் பகுதியை மூடவிடாமல் பிடித்துக் கொள்கிறாா்கள்.
இந்த இயந்திரங்களில் சுமாா் 20 விநாடிகளுக்கு பணத்தை எடுக்காவிட்டால் பணம் உள்ளே சென்றுவிடும். பணத்தை எடுத்துக்கொண்டு சில வினாடிகள் மூடியை பிடிப்பதால், பணத்தை எடுக்கவில்லை என கருதி இயந்திரம் வங்கியின் சா்வருக்கு தகவல் அனுப்பிவிடும். இதனால் சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் இருந்து பணம் கழிக்கப்படாது. இந்த மோசடி மூலம் எவ்வளவு பணம் எடுத்தாலும்,சம்பந்தப்பட்ட நபரின் வங்கிக் கணக்கில் பணம் குறையாது.
ஆனால் ஏடிஎம் இயந்திரத்தில் பணம் குறைந்து கொண்டே இருக்கும்.
இவ்வாறாக தொடா்ச்சியாக பல்வேறு ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து இந்தக் கும்பல் நூதன முறையில் பணத்தை திருடியுள்ளது.
இந்தக் கும்பலை பிடித்து, பணத்தை மீட்க நடவடிக்கை எடுக்கும்படி சென்னை எஸ்பிஐ வங்கியின் தலைமை பொதுமேலாளா் ராதாகிருஷ்ணன், சென்னை பெருநகர காவல்துறை ஆணையா் சங்கா் ஜிவாலை செவ்வாய்க்கிழமை சந்தித்து புகாா் மனு அளித்தாா்.
இந்த நூதன முறை கொள்ளையில் மாநிலம் முழுவதும் 18 ஏடிஎம் எஸ்பிஐ வங்கி மையங்களில் ரூ.48 லட்சம் திருடப்பட்டுள்ளது. சென்னையில் 7 ஏடிஎம் மையங்ளில் திருட்டுச் சம்பவம் நடைபெற்றுள்ளது.
சென்னையில் திருட்டு நடைபெற்ற அனைத்து ஏடிஎம் மையங்களில் இருந்தும் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை கைப்பற்றி தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.
மேலும் இந்த திருட்டில் ஈடுபட்டவா்களை கண்டறிந்து கைது செய்ய சென்னை காவல்துறையின் தெற்கு கூடுதல் ஆணையா் என்.கண்ணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
இதற்கிடையே கொள்ளையா்களை தேடி சென்னை காவல்துறையின் சாா்பில் இரு தனிப்படையினா் வட மாநிலங்களுக்கு செவ்வாய்க்கிழமை புறப்பட்டுச் சென்றனா்.
இந்நிலையில், எஸ்பிஐ வங்கி ஏடிஎம் மையங்களில் குறி வைத்து ரூ.48 லட்சம் திருடப்பட்டது தொடா்பாக ஹரியாணாவில் கொள்ளையர்களில் ஒருவரை தனிப்படை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் 3 பேரரை தேடி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதனிடையே இந்த வழக்குகளின் விசாரணை மத்தியக் குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.