புதுச்சேரி வில்லியனூரில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் சனிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமில், தடுப்பூசி போட்டுக் கொண்டால் பெட்ரோல் இலவசம் என அறிவித்திருந்தனர்.
முன் களப்பணியாளர்களுக்கு 1 லிட்டரும், பொதுமக்களுக்கு அரை லிட்டரும் என அறிவித்து, சனிக்கிழமை காலை முதல் வழங்கப்பட்டு வருகிறது.
கரோனா நோய்த்தொற்றை தடுக்க அனைவரும் தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் என புதுவை அரசு வலியுறுத்தி வருகிறது.
இந்நிலையில், தடுப்பூசி போட்டுக் கொள்பவர்கள் ஊக்கப்படுத்தும் வகையில், புதுச்சேரி வில்லியனூரில் புறவழிச் சாலையில் உள்ள அக்சயா பெட்ரோல் பங்கில், தடுப்பூசி போடும் முகாம் சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்றது.
புதுவை எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சிவா எம்எல்ஏ முகாமை தொடங்கி வைத்தார்.
இந்த முகாமில் தடுப்பூசி போட்டுக்கொண்ட முன் களப்பணியாளர்கள் மற்றும் ஆட்டோ ஓட்டுநர்களுக்கு ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கினர். பொதுமக்களுக்கு அரை லிட்டர் பெட்ரோல் இலவசமாக வழங்கினர்.
இந்த சிறப்பு சலுகை அறிவித்ததால், பொதுமக்கள் ஆர்வத்துடன் தடுப்பூசி செலுத்திக்கொண்டு, பெட்ரோல் போட்டு சென்றனர்.