சிபிசிஐடி விசாரணைக்கு பிறகு சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைப்பு

சிபிசிஐடி விசாரணை முடிந்த நிலையில், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 
சிவசங்கர் பாபா(படம்: முகநூல்)
சிவசங்கர் பாபா(படம்: முகநூல்)


சென்னை: சிபிசிஐடி விசாரணை முடிந்த நிலையில், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

பாலியல் குற்றச்சாட்டில் சிக்கிய செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கத்தில் சுஷில்ஹரி இன்டர்நேஷனல் பள்ளி என்கிற பள்ளியைத் தொடங்கி நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது போக்சோ சட்டம் உள்ளிட்ட 6 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. 

இதனிடையே தலைமறைவாகி தில்லியில் பிடிபட்ட அவரை சிபிசிஐடி போலீஸார் செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி கடந்த சில தினங்களுக்கு முன்பு சிறையில் அடைத்தனர். 

மாணவிகளிடம் அத்துமீறி நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தன. தமிழ்நாடு குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் சிவசங்கர் பாபாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாராணை முடிவடைந்த நிலையில், சிவசங்கர் பாபா மீது மாமல்லபுரம் அனைத்து மகளிர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். பின்னர் வழக்கு சிபிசிஐடி போலீஸார் விசாரணைக்கு மாற்றப்பட்டு, செங்கல்பட்டு போக்சோ நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

நீதிமன்ற நடுவர் உத்தரவுப்படி அவர் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த நிலையில் சிவசங்கர் பாபாவை 10 நாள்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி டிஎஸ்பி குணவர்மன் தலைமையில், நீதிமன்றத்தில் மனு அளித்திருந்தனர். இம்மனு மீதான விசாரணை நடத்துவதற்காக திங்கள்கிழமை மாலை செங்கல்பட்டு போக்சோ நீதிமன்ற நீதிபதி தமிழரசி முன்பு சிவசங்கர் பாபாவை சிபிசிஐடி போலீசார் ஆஜர் படுத்தினர். 

அப்போது, சிவசங்கர் பாபாவுக்கு ஆதரவாக வாதாடிய வழக்குரைஞர், சிவசங்கர் பாபாவுக்கு உடல்நிலை தற்போது மோசமடைந்துள்ள காரணமாக சிபிசிஐடி விசாரணைக்கு அனுமதிக்கக்கூடாது என வாதாடினார். பின்னர் இதன் மீதான விசாரணையை ஏற்கப்பட்டு 3 நாள் சிபிசிஐடி காவல் விசாரிக்க நீதிபதி தமிழரசி உத்தரவு பிறப்பித்தார்.

இதனைத்தொடர்ந்து  சிவசங்கர் பாபாவிடம் தொடர்ந்து 2 நாள்களாக சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர். 

இந்நிலையில், 2 நாள்களிலேயே சிபிசிஐடி காவல் விசாரணை முடிந்த நிலையில், பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள சிவசங்கர் பாபா மீண்டும் புழல் சிறையில் அடைக்கப்பட்டார். 

இரண்டு நாள் சிபிசிஐடி காவல் விசாரணையிலேயே மாணவர்களிடம் சிவசங்கர் பாபா அனுப்பிய ஆபாச சாட், விடியோ கால் ஆதாரங்கள், இ-மெயில் கணக்கில் இருந்து மாணவிகளுக்கு அனுப்பிய ஆபாச சாட், பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த யாகூ மெயில் கணக்குகள் என போதுமான ஆதாரங்கள் திரட்டப்பட்டுள்ளதாக சிபிசிஐடி தரப்பில் தகவல் வெளியாகி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com