வேலூர்: கரோனா நிவாரண நிதிக்கு வேலூர் பெண்கள் தனிச்சிறையில் உள்ள நளினி ரூ.5000 அளித்திருப்பதாக அவரது வழக்குரைஞர் புகழேந்தி தெரிவித்துள்ளார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் நளினி வேலூர் பெண்கள் சிறையிலும், அவரது கணவர் முருகன் வேலூர் மத்திய சிறையிலும் கடந்த 30 ஆண்டுகளாக அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் தமிழக சிறையில் வாடும் 7 தமிழர்களையும் விடுதலை செய்வது தொடர்பான கோரிக்கைகள் நீண்டகாலமாக அரசின் பரிசீலனையில் இருந்து வருகின்றன.
தற்போது தமிழகத்தில் வேகமாக பரவி வரும் கரோனா தொற்று பாதிப்பைத் தடுக்க பல்வேறு தரப்பினரும் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு நிதியுதவி அளித்து வருகின்றனர்.
அந்தவகையில், வேலூர் சிறையிலுள்ள நளினியும் கரோனா நிவாரண நிதியுதவியாக ரூ.5000 தொகையை சிறைக் கண்காணிப்பாளர் மூலம் முதல்வரின் பொது நிவாரண நிதிக்கு வழங்கியுள்ளார். இந்த தொகை சிறையில் அவர் வேலை செய்து சேமித்து வைத்துள்ள தொகையில் இருந்து கழித்துக் கொள்ளப்படும் என்றும் சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள நளினி, ஏற்கனவே பல்வேறு பாதிப்புகளுக்கும் நிவாரண நிதியுதவி அளித்து வந்துள்ளார். கடந்த 2018 நவம்பர் மாதம் ஏற்பட்ட கஜா புயல் பாதிப்பின்போதும் ரூ.1000 நிவாரண நிதியுதவி அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.