

வேலூர்: தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் சகோதரரும், முன்னாள் மத்திய அமைச்சருமான மு.க. அழகியின் மகன் துரை தயாநிதிக்கு கடந்தாண்டு டிசம்பர் 6-ஆம் தேதி திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டு சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
அங்கு அவருக்கு மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்தனர். தொடர்ந்து, சிகிச்சையில் இருந்து வரும் துரைதயாநிதிக்கு புனர்வாழ்வு பயிற்சிக்காக வேலூர் சிஎம்சி மருத்துவமனையில் கடந்த மார்ச் 14-ஆம் தேதி அனுமதிக்கப்பட்டார்.
இங்கு அவருக்கு தீவிர சிகிச்சையுடன், புனர்வாழ்வு பயிற்சிகளும் அளிக்கப்பட்டு வருவதாக மருத்துவ வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், மக்களவைத் தேர்தலையொட்டி வேலூர், அரக்கோணம் தொகுதி திமுக வேட்பாளர்களை ஆதரித்து தேர்தல் பிரசாரம் செய்வதற்காக செவ்வாய்க்கிழமை மதியம் வேலூருக்கு வருகை புரிந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், மாலை 6 மணியளவில் வேலூர் கோட்டை மைதானத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று உரையாற்றுகிறார்.
இதையொட்டி, சென்னையிலிருந்து சாலை மார்க்கமாக வேலூர் வந்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், அவரது மனைவி துர்கா ஸ்டாலின் ஆகியோர் நேராக சிஎம்சி மருத்துவமனைக்குச் சென்று அங்கு சிகிச்சையில் உள்ள துரை தயாநிதியை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
அப்போது, மு.க.அழகிரி, அவரது குடும்பத்தினர் உடனிருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.