தில்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த சன்ரைசர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது.
ஐபிஎல் தொடரின் 35ஆவது லீக் ஆட்டத்தில் தில்லி கேப்பிடல்ஸ் - சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிகள் இன்று விளையாடுகின்றன. தில்லி அருண் ஜேட்லி மைதானத்தில் நடைபெறும் இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற தில்லி கேப்பிடல்ஸ் அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட், அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இருவரின் ஆட்டத்திலும் அனல் பறந்தது. இதனால் சன்ரைசர்ஸ் அணியின் ஸ்கோர் ஜெட் வேகத்தில் உயர்ந்தது.
தொடக்க விக்கெட்டுக்கு இருவரும் இணைந்து 131 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைந்தனர். அதிரடியாக விளையாடிய அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 46 ரன்கள் சேர்த்து தனது விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த மார்க்ரம் ஒரு ரன்னில் ஆட்டமிழக்க கிளாசென் உள்ளே வந்தார். மற்றொரு புறம் சிறப்பாக ஆடிய டிராவிஸ் ஹெட் அரைசதம் கடந்து 89(32) ரன்களுக்கு வெளியேறினார். அவரைத் தொடர்ந்து கிளாசென் 15 ரன்களில் ஆட்டமிழந்தார்.
பின் வரிசையில் வந்த நிதிஷ் ரெட்டி 37, ஷாபாஸ் அகமது 59(29) ரன்கள் எடுத்தனர். இதனால் நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் சன்ரைசர்ஸ் அணி 7 விக்கெட் இழப்புக்கு 266 ரன்கள் குவித்தது. ஷாபாஸ் அகமது 59, வாஷிங்டன் சுந்தர் 0 ரன் எதுவும் எடுக்காமலும் களத்தில் இருந்தனர். தில்லி கேப்பிடல்ஸ் அணியில் சிறப்பாக பந்துவீசிய குல்தீப் யாதவ் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.