மத்திய பிரதேச காங்கிரஸ் கட்சியிலிருந்து 6 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ராம்நிவாஸ் ராவத் தன்னுடைய ஆதரவாளர்களுடன் இன்று மாநில முதல்வர் மோகன் யாதவ் முன்னிலையில் பாஜகவில் இணைந்தார்.
அவருடன், காங்கிரஸைச் சேர்ந்த மொரேனா மாவட்ட மேயர் ஷர்தா சோலங்கியும் பாஜகவில் இணைந்தார்.
6 முறை சட்டமன்ற உறுப்பினராகவும், ஒரு முறை அமைச்சராகவும் இருந்துள்ள ராம்நிவாஸ் ராவத் கடந்த 2019 மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் சார்பில் மத்திய பிரதேசத்தின் மொரேனா தொகுதியில் போட்டியிட்டு பாஜகவின் நரேந்திர சிங் தோமரிடம் தோல்வியடைந்தார். அதற்கு முன்னர் ம.பியில் 2018 சட்டமன்றத் தேர்தலிலும் அவர் தோல்வியடைந்திருந்தார். மீண்டும் 2023 சட்டமன்றத் தேர்தலில் விஜய்பூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று தற்போது சட்டமன்ற உறுப்பினராக பதவி வகிக்கிறார்.
இந்தமுறை மக்களவைத் தேர்தலில் மொரேனா தொகுதியில் தனக்கு போட்டியிட வாய்ப்பளிக்கப்படும் என்று நம்பிய ராவத்துக்கு பதிலாக காங்கிரஸ் கட்சி சத்யபால் சிங் சிகர்வாருக்கு வாய்ப்பு வழங்கியது. அதில் ஏமாற்றமடைந்த ராவத், இன்று ராகுல் காந்தி அந்தப் பகுதியில் பரப்புரைக்கு வந்தபோது தன்னை பாஜகவில் இணைத்துக் கொண்டார்.
மத்திய பிரதேச காங்கிரஸில் முக்கியத் தலைவராக இருந்த ராம்நிவாஸ் ராவத் பாஜகவில் இணைந்திருப்பது மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு சரிவை ஏற்படுத்த வாய்ப்புள்ளது. மேலும், மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில், முதல் மற்றும் இரண்டாம் கட்டத் தேர்தல்களில் 12 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு முடிந்துள்ள வேளையில், மீதமுள்ள 17 தொகுதிகளுக்கு மே 7, 13 ஆகிய தேதிகளில் மூன்றாம் மற்றும் நான்காம் கட்டத் தேர்தல்கள் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.