பவானிசாகர் அணை திறப்பு: தமிழக அரசு உத்தரவு!
120 நாள்களுக்கு 23846.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு உத்தரவு.


பவானிசாகர் அணையில் இருந்து முதல் போக பாசனத்துக்கு தண்ணீர் திறக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் மேட்டூா் அணைக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய அணையாக விளங்கும் பவானிசாகர் அணையின் மூலம் ஈரோடு, திருப்பூா் மற்றும் கரூா் மாவட்டங்களில் உள்ள 2 லட்சத்து 47 ஆயிரம் ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
அணையின் நீா்ப்பிடிப்பு பகுதிகளான நீலகிரி மலைப் பகுதி மற்றும் வட கேரளத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் பவானி ஆறு மற்றும் மாயாற்றில் நீா்வரத்து அதிகரித்துள்ளதால் பவானிசாகர் அணையின் நீா்மட்டம் கடந்த சில நாள்களாக உயா்ந்துள்ளது.
இது தொடர்பாக தமிழக அரசு வெளிட்ட அரசாணையில் தெரிவித்திருப்பதாவது:
2024 - 2025-ஆம் ஆண்டு முதல் போக பாசனத்திற்கு, ஈரோடு மாவட்டம், பவானிசாகர் அணையிலிருந்து கீழ்பவானித்திட்டப் பிரதான கால்வாய் ஒற்றைப்படை மதகுகள் மற்றும் சென்னசமுத்திரம் பகிர்மான கால்வாய் இரட்டைப்படை மதகுகளின் நன்செய் பாசனத்திற்கு 15.08.2024 முதல் 12.12.2024 முடிய 120 நாள்களுக்கு 23846.40 மில்லியன் கன அடிக்கு மிகாமல் தண்ணீர் திறந்துவிட அரசு ஆணையிட்டுள்ளது.
இதனால், ஈரோடு மாவட்டத்தில் சத்தியமங்கலம், கோபி, நம்பியூர், பவானி, பெருந்துறை, ஈரோடு, மொடக்குறிச்சி, கொடுமுடி ஆகிய வட்டங்களிலுள்ள நிலங்களும் திருப்பூர் மாவட்டம், காங்கேயம் வட்டத்திலுள்ள நிலங்களும் மற்றும் கரூர் மாவட்டம், அரவக்குறிச்சி வட்டத்திலுள்ள நிலங்களும் என ஆக மொத்தம் 103500 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...