
திருச்செந்தூர்: திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆவணித் திருவிழா சனிக்கிழமை அதிகாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆக. 24-ஆம் தேதி ஆவணித் திருவிழா கொடியேற்றத்தை முன்னிட்டு அதிகாலை 1 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 1.30 மணிக்கு விஸ்வரூப தரிசனம், 2 மணிக்கு உதய மாா்த்தாண்ட அபிஷேகம், 3 மணிக்கு உதயமார்த்தாண்ட தீபாராதனை நடைபெற்றது. அதிகாலை 3 மணியளவில் கொடிப்பட்டமானது வெள்ளிப்பல்லக்கில் வைத்து 9 சந்நிதி வழியாக கொண்டுவரப்பட்டு மேளதாளங்கள் முழங்க அதிகாலை 5.15 மணிக்கு கோயில் பிரகாரத்திலுள்ள செப்புக்கொடிமரத்தில் காப்புகட்டிய ஹரிஹரசுப்பிரமணிய பட்டர் கொடியினை ஏற்றினார்.
தொடர்ந்து கொடிமரத்திற்கு 16 வகை அபிஷேகங்கள் மற்றும் அலங்காரமாகி காலை 6.30 மணிக்கு சிறப்பு தீபாராதனை நடைபெற்றது.
திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் செப். 2-ஆம் தேதி நடைபெறுகிறது.
நிகழ்ச்சியில் திருவாவடுதுறை ஆதீனம் ஸ்ரீ மத் சங்கரலிங்க தம்பிரான் சுவாமிகள், திருச்செந்தூர் சார்பு நீதிபதி செல்வபாண்டி, கோயில் அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், இணை ஆணையர் எஸ்.ஞானசேகரன், திருக்கோயில் பணியாளர்கள், ஏரல் சேர்மன் கோயில் பரம்பரை அக்தார் கருத்தப்பாண்டி, இந்து முன்னணி மாநில துணைத்தலைவர் வி.பி.ஜெயக்குமார், மாநில நிர்வாக குழு உறுப்பினர் சக்திவேலன், திரிசுதந்திரப்பெருமக்கள், செந்தில்முருகன் தேவார சபையினர், ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழாவிற்கான ஏற்பாடுகளை அறங்காவலர் குழு தலைவர் ரா.அருள்முருகன், இணை ஆணையர் எஸ்.ஞானசேகரன், அறங்காவலர்கள் அனிதா குமரன், பா.கணேசன், ந.ராமதாஸ், வி.செந்தில்முருகன் மற்றும் கோயில் பணியாளர்கள் செய்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.