
ஆலப்புழா: கேரளாவில் கடந்த 2004 ஆம் ஆண்டு மனைவியைக் கொன்ற 60 வயது முதியவருக்கு தற்போது மரண தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது.
ஆலப்புழா மாவட்டம் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர் 60 வயதாகும் குட்டிக்கிருஷ்ணன். இவர் கடந்த 2004 ஆம் ஆண்டு 39 வயதுடைய தனது மனைவி ஜெயந்தியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அவரைக் கத்தியால் குத்தியும் தலையைத் துண்டித்தும் கொலை செய்தார். பின்னர், அவரே மறுநாள் இந்தக் கொலை குறித்து மன்னார் காவல் நிலையத்தில் புகாரளித்தார்.
அதனைத் தொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில் குட்டிக்கிருஷ்ணன்தான் தங்களது ஒன்றரை வயது குழந்தையின் முன்னால் ஜெயந்தியைக் கொன்றது கண்டுப்பிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
பின்னர், பிணையில் வெளியே வந்தவர் தலைமறைவானார்.
இதையும் படிக்க: புர்கினோ ஃபசோவின் ராணுவ அரசினால் நியமிக்கப்பட்ட புதிய பிரதமர்!
கடந்த 2022 ஆம் ஆண்டு மாவட்ட காவல்துறை உயர் அதிகாரியாக சைத்திரா தெரேசா ஜான் பதவி ஏற்றுக்கொண்ட பின்னர் நிலுவையிலுள்ள வழக்குகளை முடிக்க தனிக்குழு அமைக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளின் மூலம் 2023ஆம் ஆண்டு எர்ணாக்குளம் மாவட்டத்தில் குட்டிக்கிருஷ்ணன் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில் 20 வருடங்கள் கழித்து நேற்று மவேளிக்கரா மாவட்ட கூடுதல் நீதிமன்றம் குட்டிக்கிருஷ்ணனுக்கு மரண தண்டனையும் 1,00,000 ரூபாய் அபராதமும் விதித்தது. மேலும், அந்த அபராதத் தொகையிலிருந்து 50,000 ரூபாயும் கொல்லப்பட்ட ஜெயந்தியின் தங்க நகைகளும் அவர்களது மகளிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் தீர்ப்பளிக்கப்பட்டது.
2004 ஆம் ஆண்டு நடைபெற்ற மன்னார் ஜெயந்தியின் கொலை அக்காலத்தில் மிகவும் பிரபலமான வழக்காக பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.