முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீட்டில் சிபிசிஐடி சோதனை!
கரூரில் ரூ.100 கோடி மதிப்பிலான நில அபகரிப்பு வழக்கில் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் வீடு மற்றும் நிறுவனங்கள் என 10-க்கும் மேற்பட்ட இடங்களில் சிபிசிஐடி போலீசார் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நில மோசடி வழக்கில் தலைமறைவாக இருக்கும் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவரது தம்பி சேகர் வீடு உள்ளிட்ட நான்கு இடங்களில் சிபிசிஐடி போலீசார் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 7 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூர் அடுத்த வாங்கல் குப்புச்சிபாளையத்தைச் சேர்ந்த பிரகாஷ் என்பவர் கடந்த மாதம் 25ஆம் தேதி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி சேகர் உள்பட மூன்று பேர் சேர்ந்து தனது ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை போலி பத்திரம் தயாரித்து அபகரித்து விட்டதாக கரூர் நகர காவல் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் வழங்க வேண்டும் எனக் கூறி முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் அவரது தம்பி சேகர் ஆகியோர் கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கானது சிபிசிஐடி போலீஸுக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, கரூர் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் 8 தனிப்படைகள் அமைத்து தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம் .ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி உள்ளிட்டோரை தேடி வரும் நிலையில் வெள்ளிக்கிழமை காலை கரூர் மாவட்ட சிபிசிஐடி போலீஸார் முன்னாள் அமைச்சர் எம். ஆர். விஜயபாஸ்கரின் ஆதரவாளர்கள் வீடுகளில் சோதனை நடத்தினர்.
இதனிடையே, இந்த வழக்கில் முன் பிணைக் கேட்டு கரூர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் அவரது தம்பி ஆகியோரின் மனுவை சனிக்கிழமை இரவு மாவட்ட அமர்வு நீதிபதி தள்ளுபடி செய்தார்.
இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 7 மணியளவில் கரூர் ஆண்டாங்கோயிலில் உள்ள எம்.ஆர். விஜயபாஸ்கரின் வீடு மற்றும் அவரது தம்பி சேகர் வீடு, ரெயின்போ நகரில் உள்ள எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு சொந்தமான சாயப்பட்டறை மற்றும் திருவிக நகரில் உள்ள எம்.ஆர்.வி. டிரஸ்ட் ஆகிய நான்கு இடங்களில் சிபிசிஐடி போலீஸார் சோதனை நடத்தி வருகின்றனர்.
கரூரைத் தொடர்ந்து, சென்னை ராஜா அண்ணாமலைபுரம் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எம்.ஆர். விஜய பாஸ்கரின் வீட்டிலும் சிபிசிஐடி சோதனை நடைப்பெற்று வருகிறது.
மேலும், அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கரை தனிப்படை அமைத்து பிடிக்க சிபிசிஐடி போலீஸார் திட்டமிட்டு இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.