கடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரா் குருபரிகார கோயில் மகாகும்பாபிஷேகம்

நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயில் மகாகும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை அதிவிமரிசையாக நடைபெற்றது.

News image

நவக்கிரகஸ்தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குரு பரிகார கோயிலில் நடந்த மகாகும்பாபிஷேகம்.

Updated On :12 ஜூலை 2024, 5:45 am

DIN

நீடாமங்கலம்: நவக்கிரக ஸ்தலங்களில் ஒன்றாகப்போற்றப்படும் ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயில் மகாகும்பாபிஷேக விழா வெள்ளிக்கிழமை அதிவிமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

நீடாமங்கலம் அருகேயுள்ளது ஆலங்குடி கிராமம்.இங்கு ஆபத்சகாயேஸ்வரர் குருபரிகார கோயில் உள்ளது. திருஞானசம்பந்த பெருந்தகையால் எழிலார் இரும்பூளை என அருளப்பெற்றது. பார்க்கடல் கடைந்த போது உண்டான ஆலகால விஷத்தை உண்டு தேவர்கள் ஆபத்திலிருந்து காத்து இரட்சித்தமையால் ஆபத்சகாயர் என்ற பெயர் இறைவனுக்கு ஏற்பட்டது. இவ்வூரில் விஷத்தால் எவருக்கும் யாதொரு தீங்கும் ஏற்பட்டதில்லை. இது இன்றளவும் நடைபெற்று வரும் உண்மையாகும்.

நவக்கிரகங்களில் உள்ள குருபகவானுக்கு பரிகார ஸ்தலமாகும்.

சிறப்பு வாய்ந்த இந்த கோயிலில் ஆண்டுதோறும் குருபகவான் ஒரு ராசியிலிருந்து மற்றொரு ராசிக்கு பெயர்ச்சி அடையும் நாளில் குருபெயர்ச்சி விழா அதிவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பிற மாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருகை தந்து குருபகவானை வழிபட்டு செல்லும் சிறப்பிற்குரியது.

சிறப்பு வாய்ந்த இந்த கோயிலின் மகாகும்பாபிஷேகம் நடந்து பனிரெண்டு ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி மீண்டும் கும்பாபிஷேகம் நடத்த அறநிலையத்துறை முன்வந்தது. இதன் பேரில் கடந்த 2021-ஆ ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கியது. கோயில் முழுவதும் புதிதாக மின்வயா்கள் மாற்றப்பட்டு புதிய மின்சார உபகரணங்கள் பொருத்தப்பட்டு நவீன மின்வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

கலந்து கொண்ட பக்தர்கள்.

கலந்து கொண்ட பக்தர்கள்.

இதற்காக திருக்கோயில் ரூ. 85 லட்சம் செலவு செய்யப்பட்டுள்ளது. ராஜகோபுரம், ஆபத்சகாயேஸ்வரா், ஏலவாா் குழலியம்மன் உள்ளிட்ட சுவாமி சந்நிதிகள்

விமானங்கள் புதுப்பிக்கும் பணிகள் நடந்துள்ளது. உபயதாரர்கள் மூலம் நடந்துள்ள இந்த பணிகளின் மொத்த மதிப்பு ரூ.71 லட்சம். திருப்பணி வேலைகளின் மொத்த மதிப்பு ரூ.1 கோடியே 56 லட்சம். இவைத்தவிர மகாகும்பாபிஷேகத்திற்கான யாகசாலை பந்தல் அமைத்தல், யாகசாலை செலவினங்கள் உள்ளிட்ட செலவினங்களையும் சேர்த்தால் சுமார் ரூ.2 கோடி செலவாகியிருக்கும் என தெரிகிறது.

கும்பாபிஷேக விழாவையொட்டி யாகசாலை பூஜைகள் கடந்த 7 ஆம் தேதி தொடங்கியது. 6 ஆவது கால யாகசாலை பூஜைகள் வியாழக்கிழமை அதிகாலை நடந்தது.

அதனைத்தொடர்ந்து திருக்குடங்கள் புறப்பாடு நடந்தது. சரியாக காலை 6.01 மணிக்கு கலங்காமற் காத்த கணபதி, ஆபத்சகாயேஸ்வரர், ஏலவார்குழலி விமானங்கள், ராஜகோபுரங்கள், ஏனைய விமானங்கள் மகாகும்பாபிஷேகம், ஆபத்சகாயேஸ்வரர்,ஏலவார்குழலி, குருதட்சிணாமூர்த்தி விமானம் மற்றும் மூலாலய மகாகும்பாபிஷேகம் நடைபெற்றது. மகாதீபாராதனை மற்றும் அருட்பிரசாதம் வழங்கப்பட்டது.

கும்பாபிஷேக விழாவில் நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ்,முன்னாள் அறங்காவலர் குழுத்தலைவர் வீ.அன்பரசன், வலங்கைமான் ஒன்றியக்குழுத்தலைவர் கே.சங்கர்,ஒன்றிய திமுக செயலாளர் தெட்சிணாமூர்த்தி, பாஜக மாவட்ட துணைத்தலைவர் ஜெயக்குமார், இந்தியகம்யூனிஸ்ட் ஒன்றிய செயலாளர் எஸ்.எம்.செந்தில்குமார், திமுக நகர செயலாளர் சிவநேசன் உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்.

திருமறை, திருமறை பாராயணம் மற்றும் இன்னிசைகள் நடைபெற்றது.

குருபகவான் சன்னதியில் பக்தர்கள்.

குருபகவான் சன்னதியில் பக்தர்கள்.

கும்பாபிஷேகம் விழாவை ஆலங்குடி ஜோதிராமலிங்க சிவாச்சாரியார்,திருப்பரங்குன்றம் ராஜாபட்டர், திப்பிராஜபுரம் வெங்கடேச சிவாச்சாரியார், ஸ்தல அர்ச்சகர்கள் ரமேஷ்சுவாமிநாத சிவாச்சாரியார், ஞானஸ்கந்த சிவாச்சாரியார் மற்றும் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்களைச் சொல்லி கும்பாபிஷேகத்தை நடத்தி வைத்தனர்.

ஆலங்குடி சிவ.சந்திரசேகரதேசிகர் மற்றும் தேவார ஆசிரியர்கள் தேவாரம் பாடினர்.

திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தலைமையில் பெண் போலீசார் உள்பட ஏராளமான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டனர்.

விழாவிற்கான ஏற்பாடுகளை கோயில் தக்கார் ராமு, செயல்அலுவலர் சூரிய நாராயணன்,கண்காணிப்பாளர் அரவிந்தன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் செய்திருந்தனர்.

தீயணைப்புத்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

கும்பாபிஷேக விழா அதிகாலையில் நடந்ததாலும்,விடுமுறை நாள் இல்லாதது காரணமாகவும், போதுமான விளம்பரம் இல்லாததாலும் பக்தர்கள் கூட்டம் அதிகமில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.