
பிரதமர் நரேந்திர மோடிக்கு எதிரான வன்முறையை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி ஊக்குவிப்பதாக கூறிய பாஜகவின் குற்றச்சாட்டுக்கு, மலிவான அரசியலில் ஈடுபடுவதாக காங்கிரஸ் சாடியுள்ளது.
அமெரிக்காவின் பென்ஸில்வேனியாவில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப்பை நோக்கி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதில், அவர் படுகாயம் அடைந்தார்.
இச்சம்பவத்துக்கு உலக நாடுகளின் தலைவர்கள் கண்டனம் தெரிவித்தனர். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி கண்டனம் தெரிவித்திருந்தார்.
இதனை மறுபதிவு செய்து பாஜக செய்தித் தொடர்பாளர் அமித் மாளவியா தன்னுடைய எக்ஸ் தளப்பதிவில், ''ராகுல் கூறுவது பொய்யான வார்த்தைகள். மூன்றாவது முறையாக தோல்வியடைந்த ராகுல் காந்தி, பிரதமர் மோடிக்கு எதிரான வன்முறையை அடிக்கடி ஊக்குவித்து அதனை நியாயப்படுத்தினார். இம்முறை தேர்தலில் தோல்வி அடைந்த பிறகும் பலமுறை அதனைச் செய்துள்ளார்.
அப்போது காங்கிரஸ் ஆட்சியின் கீழ் இருந்த பஞ்சாப் காவல்துறை, பிரதமரின் பாதுகாப்பில் வேண்டுமென்றே சமரசம் செய்ததையும், பிரதமரின் வாகனம் மேம்பாலத்தில் தடுத்து நிறுத்தப்பட்டதையும் இந்தியாவால் எப்படி மறக்க முடியும்'' எனப் பதிவிட்டிருந்தார்.
இதற்கு பதலடி கொடுக்கும் வகையில் பவன் கேரா தன்னுடைய எக்ஸ் தளப் பதிவில், “ தலைவர்களின் பாதுகாப்பு விஷயத்தில் மலிவான அரசியலில் ஈடுபடக்கூடாது. காங்கிரஸ் கட்சி வலதுசாரி பயங்கரவாதிகள் இடமிருந்து மகாத்மா காந்தியை இழந்தது. இரண்டு பிரதமர்களை பயங்கரவாதிகளால் இழந்தோம்.
பாஜகவின் கண்காணிப்பின் கீழ் இருந்த இடதுசாரி பயங்கராவாதிகளால் எங்களின் முழு சத்தீஸ்கரின் தலைமையையும் இழந்தோம்.
பிரதமர் மோடி மற்றும் ஒட்டுமொத்த பாஜகவும் நேரு, இந்திராகாந்தி மற்றும் ஒட்டுமொத்த குடும்பத்தின் மீது கசப்பான பொய்களைப் பரப்பி காங்கிரஸ் கட்சியின் தலைமைக்கு எதிராக மக்களை தூண்டிவிடுகிறது. அவர்களுக்கான எஸ்பிஜி பாதுகாப்பை அவர்(மோடி) மர்மமான முறையில் விலக்கிக் கொண்டுள்ளார்.” என்று குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.