
புதிய வகை பயிரினங்களை அறிமுகம் செய்வது தொடர்பாக ஆஸ்திரேலியாவில் மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் பல்துறை வல்லுநர்களுடன் தமிழக அரசின் வேளாண் குழு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலினின் ஆணைக்கேற்ப வேளாண்மை – உழவர் நலத் துறையின் சார்பாக மேற்கொள்ள வேண்டிய மேம்பாட்டு பணிகள் தொடர்பான ஆய்வுகள், தொழில்நுட்ப மேம்பாடு மற்றும் தொழில்நுட்பங்களை பயன்படுத்துவதில் முன்னேற்றத்தை ஏற்படுத்துவது போன்ற பணிகளுக்காக வேளாண்மை - உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் தலைமையிலான குழு ஆஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறை பயணமாக சென்றுள்ளது.
இந்தக் குழுவில் வேளாண்மை - உழவர் நலத்துறையின் வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு முதன்மை செயலாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் சென்றனர்.
இப்பயணத்தின் முதற்கட்டமாக இன்று 24.07.2024 ஆஸ்திரேலியாவில் உள்ள மெல்பர்ன் பல்கலைக்கழகத்தில் பல்துறை வல்லுநர்களுடன் கலந்துரையாடல் மற்றும் தொழில்நுட்ப பங்குகள் தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது.
இந்த கலந்துரையாடலில் காலநிலை மாற்றம், புதிய வகை பயிரினங்கள் அறிமுகம், வேளாண்மை – உழவர் நலத்துறையில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்துவது, மண்வளம் காப்பதற்கான நடவடிக்கை, பூச்சிநோய் தாக்குதலில் இருந்து பயிர்களைக் காப்பது, உயர் தொழில்நுட்ப வேளாண்மை முறைகளைத் தீவிரப்படுத்துவது, தோட்டக்கலை பயிர்களான பழ வகைப்பயிர்கள் மற்றும் மருத்துவ பயிர்களை கையாளுதல், அனைத்து வகை பயிர்களிலும் அறுவடைக்கு பின்னர் மேற்கொள்ளப்பட வேண்டிய வழிகாட்டு முறைகள், உணவு வகைப் பயிர்களில் புதுமையை ஏற்படுத்துதல், தொழில்நுட்ப மேம்பாட்டிற்கான பயிற்சியை மேம்படுத்துதல், வேளாண்மைப் பாடங்கள் பயிலும் மாணவர்களின் திறமைகளை மேம்படுத்துதல் போன்றவை விவாதிக்கப்பட்டன.
வேளாண்மைத் தொழிலில் அரசு/துறை தொடர்பாக, மேற்கொள்ளப்பட்ட கருத்து பரிமாற்றங்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணையைப் பெற்று தமிழ்நாட்டில் நடைமுறைப்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.