தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்பொழுது அக்னி நட்சத்திரம் என்று கூறப்படும் கத்திரி வெயில் தொடங்கியுள்ளது.
இது, இம்மாதம் 28ஆம் தேதி வரை தொடர்கிறது. தமிழகத்திலேயே அதிக வெப்பம் பதிவாகும் மாவட்டங்களில் ஒன்றாக ஈரோடு மாவட்டம் உள்ளது. இதனால், கோடை வெயிலின் தாக்கத்தால் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மிகப்பெரும் சிரமத்திற்கு உள்ளாகி வரக்கூடிய நிலையில் தமிழகத்தின் பிற மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியிலும் சிக்னலில் நிற்கும் வாகன ஓட்டிகளுக்காக பச்சை திரை கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
அதை முன்மாதிரியாக கொண்டு ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் முதல் கட்டமாக மாவட்ட ஆட்சியர் அலுவலக அருகே உள்ள போக்குவரத்து சிக்னலில் தற்போது பச்சை திரை கொண்ட மேற்கூரை அமைக்கப்பட்டுள்ளது.
இதுபோன்ற பச்சை திரை கொண்ட மேற்கூரை மாநகரின் முக்கிய போக்குவரத்து சிக்னல்கள் அனைத்திலும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சிக்னலில் இரண்டு நிமிடம் வரை காத்திருக்கும் வாகன ஓட்டிகள் வெயில் தாக்கத்திலிருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள முடிவதாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.