
’எந்த மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அரசு நிலத்தில் சட்ட விரோதமாக வழிபாட்டுத் தலங்கள் அமைக்க அனுமதியில்லை’ என்று கேரள உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
குத்தகைக்கு விடப்பட்டுள்ள அரசு சொத்துக்களை அடையாளம் கண்டு அங்குள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற மாநில அரசு, கேரள காவல்துறை மற்றும் பத்தனம்திட்ட மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடுமாறு கூறிய கேரள தோட்டக்கலைத்துறையின் மனுவுக்கு கேரள உயர்நீதிமன்றம் பதிலளித்துள்ளது.
அதில், ‘கடவுள் என்பவர் சர்வ வல்லமை படைத்தவர். அவர் எங்கும் நிறைந்திருப்பார். அவரை நம்புவோரின் உடலிலும், வீடுகளிலும், எல்லா இடத்திலும் அவர் இருப்பார்.
எனவே, மத வழிபாட்டுத் தலங்களை அமைக்க கடவுள் நம்பிக்கையுள்ளவர்கள் அரசு நிலங்களை ஆக்கிரமிக்கத் தேவையில்லை. அதற்கு பதிலாக அவை மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டு பயன்படட்டும். அப்போது கடவுள் மிகவும் மகிழ்சியடைந்து அனைவருக்கும் ஆசீர்வதம் அளிப்பார்’ என்று நீதிபதி பி.வி.குன்னிகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
அந்த மனுவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், குத்தகைக்கு விடப்பட்ட அரசு சொத்துக்களை அடையாளம் காணவும், அரசு நிலங்களிலுள்ள மதக் கட்டுமானங்கள் உள்பட அனைத்து ஆக்கிரமிப்புகளையும் நீதிமன்ற உத்தரவு கிடைத்த ஆறு மாதங்களுக்குள் அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது.
மேலும், அனுமதியின்றி வைக்கப்பட்டுள்ள மதம் சார்ந்த கற்கள், சிலுவைகள், மத கட்டுமானங்கள் மற்றும் மதம் சார்ந்த நிறங்களில் அரசு நிலங்களில் உள்ள அனைத்து மத அடையாளங்களையும் அகற்ற மாவட்ட ஆட்சியர்கள் அனைவருக்கும் உத்தரவிடுமாறு தலைமைச் செயலாளருக்கு நீதிமன்றம் மே 27. அன்று உத்தரவிட்டது.
“அரசு நிலங்களில் கட்டப்பட்ட வழிபாட்டு தலங்கள் ஏதேனும் கண்டறியப்பட்டால் காவல்துறை உதவியுடன் விசாரணை செய்து, சம்பந்தப்பட்டவர்களுக்கு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் அதைக் கேட்டுக்கொண்டு ஆறு மாத காலத்திற்குள் அவற்றை அகற்ற வேண்டும்” என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தோட்ட வேலை செய்யும் தொழிலாளர்கள் 'லயம்’என்றழைக்கப்படும் தங்குமிடங்களில் வசிப்பதாகவும், அதன் ஊழியர்களில் பெரும்பாலோர் இந்து மதத்தில் நம்பிக்கை கொண்டுள்ள அவர்கள் அருகே வழிபாட்டுத் தலங்கள் இல்லாததால் அவர்கள் அங்கு சிறியக் கட்டிடங்களை எழுப்பி அவற்றில் தெய்வங்களை வைத்து வழிபட்டுள்ளனர்.
இதுபோன்ற சிறிய கோயில்கள் அமைப்பதை மாநகராட்சி எதிர்க்காததால் உள்ளூர்வாசிகள் அந்த சிறிய கோயில்களுக்கு அருகில் புதிய கட்டிடங்களை எழுப்ப முயற்சித்ததாகவும், இது மாநகராட்சிக்கும் உள்ளூர்வாசிகளுக்கும் இடையே உரசல்களை உருவாக்கியது என்றும் காவல்துறையினர் கூறியுள்ளனர்.
”மத வழிபாடு என்ற போர்வையில் மாநிலத்தில் சட்டவிரோதமான கட்டிடங்கள் இப்படித்தான் உருவாகி வருகின்றன. ஒரு சிறிய மாநிலமான கேரளத்தில் நூற்றுக்கணக்கான கோயில்கள், மசூதிகள், தேவாலயங்கள் உள்ளன. கேரளா கடவுளின் சொந்த தேசமாகும். நிலமற்ற நூற்றுக்கணக்கான மக்களுக்கு நிலங்களைப் பகிர்ந்தளிக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அத்தகைய நிலங்களை மத நோக்கங்களுக்காக பயன்படுத்தக் கூடாது. இது மாநிலத்தின் மத நல்லிணக்கத்தைப் பாதிக்கும். அரசு நிலத்தில் ஒரு மதத்திற்கு தெய்வத்தை நிறுவ அனுமதித்தால், மற்ற மதத்தினரும் தங்கள் மத தெய்வங்களை அமைக்கத் தொடங்குவார்கள். இதனால் மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு பிரச்னைகள் உருவாகும்” என்று நீதிமன்றம் கூறியுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.