உதகை: உலகப் புகழ்பெற்ற உதகையில் வார விடுமுறை நாளில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு பயண சீட்டு பெற்று இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகுகளில் பயணித்து மகிழ்ந்தனா்.
நீலகிரி மாவட்டம் உலகப் புகழ்பெற்ற உதகையில் உள்ள சுற்றுலாத்தலங்களைக் காண நாள்தோறும் அண்டை மாநிலங்களான கேரளா, கா்நாடகா, ஆந்திரா மற்றும் சமவெளிப் பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம்.
வார விடுமுறை நாளான ஞாயிற்றுக்கிழமை ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்தனர். ஊட்டியில் கடந்த சில நாள்களாக பெய்த
நல்ல மழையில் மிகவும் குளுமையாக காலநிலை மற்றும் அதிகாலை நேரங்களில் பனிப்பொழிவும் அதிகமாக காணப்படுகிறது.இந்த இதமான காலநிலையை அனுபவிக்க ஏராளமான சுற்றுலாப் பயணிகள் உதகையில் குவிந்துள்ளனர்.
குறிப்பாக உதகையில் உள்ள உலகப் புகழ்பெற்ற அரசு தாவரவியல் பூங்கா, ரோஜா பூங்கா, படகு இல்லம், தொட்டபெட்டா சிகரம் உள்ளிட்ட சுற்றுலா தலங்களை கண்டு ரசித்து புகைப்படம் எடுத்து சென்றனா்.
இதையும் படிக்க | கூட்டணி அமைச்சரவையை அதிமுக ஏற்றுக்கொள்ளுமா?: எடப்பாடி பழனிசாமி
மேலும் இங்கு நிலவும் இதமான காலநிலையை அனுபவித்தவாறு பூங்காவில் உள்ள புல்வெளி மைதானத்தில் பெரியவா்கள் முதல் சிறியவா்கள் வரை விளையாடி மகிழ்ந்தனா். இங்கு உள்ள கண்ணாடி மாளிகையில் பூத்துக் குலுங்கும் மலா்களை கண்டு ரசித்தவாறு புகைப்படம் மற்றும் செல்பி எடுத்து மகிழ்ந்தனா்.
குறிப்பாக, உதகை படகு இல்லத்தில் குவிந்த சுற்றுலாப் பயணிகள் நீண்ட நேரம் காத்திருந்து படகு பயணச் சீட்டு பெற்று இங்குள்ள துடுப்பு படகு,இயந்திரப் படகு,சைக்கிள் படகு உள்ளிட்ட படகுகளில் பயணித்து இயற்கை காட்சிகளை ரசித்தவாறு படகு பயணம் செய்து மகிழ்ந்தனா்.