மாற்றுத்திறனாளிகளை அவமதித்ததாக கைது செய்யப்பட்ட மேடைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
சென்னை அசோக் நகர் மற்றும் சைதாப்பேட்டை அரசு பள்ளிகளில் மாணவ, மாணவிகள் மத்தியில் மேடைப் பேச்சாளர் மகா விஷ்ணு நடத்திய சொற்பொழிவு சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதற்கிடையே, ஆஸ்திரேலியாவிலிருந்து சென்னைக்கு திரும்பிய மகாவிஷ்ணுவை விமான நிலையத்தில் போலீஸார் கைது செய்தனர்.
மகாவிஷ்ணு, மாற்றுத்திறனாளிகளை இழிவுப்படுத்தியதாகக் கூறி மாற்றுத்திறனாளிகள் சங்கம் சாா்பில் பல்வேறு காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டது. இவ்வழக்கு தொடர்பாக கைதான மகாவிஷ்ணு மீது 5 பிரிவுகளின் கீழ் சைதாப்பேட்டை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து மகாவிஷ்ணு புழல் அறையில் அடைக்கப்பட்டார்.
இதையும் படிக்க: அரக்கோணம் அருகே தண்டவாளத்தில் விரிசல்: பெரும் விபத்து தவிர்ப்பு
இதனைத் தொடர்ந்து, ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு மனுத்தாக்கல் செய்தார். அதில், மாற்றுத்திறனாளிகளை புண்படுத்தும் நோக்கில் பேசவில்லை எனவும், புண்படுத்தி இருந்தால் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
மேலும், தனது பேச்சு திரித்து யூடியூப்-ல் வெளியிட்டதாகவும் அம்மனுவில் மகாவிஷ்ணு தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், மகாவிஷ்ணுவின் ஜாமீன் மனு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி கார்த்திகேயன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, மகாவிஷ்ணுவுக்கு ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.