
நாகை அருகே செல்லூர் சுனாமி குடியிருப்பின் வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்தில் தூங்கி கொண்டிருந்த 2 வயது சிறுவன் பலி; தாய் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நாகப்பட்டினம் மாவட்டம்,செல்லூர் சுனாமி குடியிருப்பில் வசித்து வருபவர் விஜயகுமார். இவருக்கு மனைவி பாண்டி மீனா மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளனர்.
இந்த நிலையில், வியாழக்கிழமை (செப்.19) இரவு குடும்பத்தோடு வீட்டில் தூங்கி கொண்டிருந்தபோது, நள்ளிரவு 12 மணியளவில் திடிரென வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்துள்ளது.
இதில் உறங்கி கொண்டிருந்து 2 வயது யாசின் ராம் மற்றும் பாண்டிமீனா இருவரும் பலத்த காயமடைந்து. இவர்களின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் அவர்களை மீட்டு நாகை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.
அங்கு மருத்துவர்கள் பரிசோதித்து விட்டு சிறுவன் யாசின் ராம் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.
தாய் பாண்டி மீனாவுக்கு தொடர்ந்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர். போலீசார் சிறுவனின் உடலை கைப்பற்றி உடல்கூறு ஆய்வுக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
செல்லூர் பகுதியில் அரசால் கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 1000 சுனாமி குடியிருப்பு வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டன. அனைத்து வீடுகளிலும் மேற்கூரைகள் சிதிலமடைந்தும், சுவர்களில் வெடிப்புகள் ஏற்பட்டும் உள்ளன. எனவே அதிகாரிகள் ஆய்வு செய்து வீடுகளை புதுப்பித்து தர வேண்டும் என குடியிருப்பு வாசிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.