
அவிநாசி: அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் சித்திரைத்தேர்த் திருவிழா மே 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குவதை முன்னிட்டு திருத்தேர் ஆயக்கால் பூஜை வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது.
கொங்கு மண்டலத்தின் ஏழு சிவஸ்தலங்களுள் முதன்மை பெற்றதும், முதலை விழுங்கிய சிறுவனை சுந்தரமூர்த்தி நாயனார், தேவார திருப்பதிகம் பாடி மீண்டும் உயிர்ப்பித்து எழச்செய்த திருத்தலமாகவும் கருணாம்பிகையம்மன் உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் கோயில் திருத்தலம் விளங்குகிறது.
இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் தேர்த் திருவிழா கோலாகலமாக நடைபெறுவது வழக்கம். இந்த ஆண்டு தேர்த்திருவிழா மே 1 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி வெள்ளிக்கிழமை காலை தேர் அலங்காரப் பணிக்காக தேர் ஆயாக்கால் பூஜை நடைபெற்றது.
இதையடுத்து மே 1 ஆம் தேதி கொடியேற்றமும் அன்று மாலை திருமுருகநாதர் வருகை நிகழ்ச்சியும், 2 ஆம் தேதி மாலை சூரிய, சந்தர மண்டல காட்சி, 3 பூதவாகன, அன்னவாகன, அதிகார நந்தி, கிளிவாகன காட்சிகள், 4 ஆம் தேதி கைலாச வாகனம், புஷ்ப பல்லக்கு ஆகியவை நடைபெறுகிறது.
5 ஆம் தேதி இரவு பஞ்சமூர்த்திகள் புறப்பாடு, 63 நாயன்மார்களுக்கு காட்சியளித்தல் கரிவரதராஜப் பெருமாள் கோயில் கொடியேற்றமும் நடைபெறுகிறது.6 ஆம் தேதி இரவு கற்பகவிருட்சம் யானை வாகனம், சுவாமி திருக்கல்யாணம் ஆகியவை நடைபெறுகிறது. மே 7 ஆம் தேதி அதிகாலை 6 மணிக்கு பஞ்சமூர்த்திகள் திருத் தேரில் எழுந்தருளல் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
முக்கிய நிகழ்ச்சியாக 8 ஆம் தேதி காலை மணிக்கு அவிநாசியப்பர் திருத் தேர் வடம் பிடித்தல், தேரோட்டம் வடக்கு ரத வீதியில் நிறுத்துதல், 9 ஆம் தேதி காலை 8 மணிக்கு அவிநாசியப்பர் திருத் தேர் மீண்டும் வடம் பிடித்தல், தேரோட்டம் நிலை சேருதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.
10 ஆம் தேதி காலை 8 மணிக்கு கருணாம்பிகையம்மன், சுப்பிரமணியர், சண்டிகேஸ்வரர், கரிவரதராஜப்பெருமாள் ஆகிய திருத் தேர் வடம் பிடித்தல் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது. 11 ஆம் தேதி பரிவேட்டை, 12 ஆம் தேதி இரவு தெப்பத் தேர் உற்சவ நிகழ்ச்சியும், 13 ஆம் தேதி நடராஜப் பெருமான் மகா தரிசனம், 14 ஆம் தேதி மஞ்சள் நீர், இரவு மயில் வாகனக்காட்சியுடன் தேர்த் திருவிழா நிறைவடைகிறது.