
சிவகங்கை: சிவகங்கை அருகே தந்தை உயிரிழந்த நிலையில் இறுதிச் சடங்கை ஒத்தி வைத்த மகன், பள்ளிக்குச் சென்று பத்தாம் வகுப்பு அரசு பொதுத் தேர்வை எழுதிய சம்பவம் ஆசிரியர்கள், மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
சிவகங்கை மாவட்டம், வடக்கு சமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த அருள்சாமி, இவர் செங்கல்சூளையில் கூலித்தொழிலாளியாக வேலை பார்த்து வந்த நிலையில் இரண்டு சிறு நீரகங்களும் செயலிழந்த நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், மருத்துவர்களால் கைவிடப்பட்டு வீட்டுக்கு அழைத்துவரப்பட்ட அருள்சாமி உடல்நிலை வியாழக்கிழமை மாலை திடீரென்று மோசமாகி உயிரிழந்தார்.
இவரது மகன் நித்திஷ்குமார், சாலைகிராமம் அரசு மேல்நிலைப்பள்ளியில் பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதி வருகிறார்.
இந்த நிலையில், இதனை அறிந்த மாணவர் நித்திஷ்குமார், அவரது தங்கை கீர்த்திகா மற்றும் அவரது குடும்பத்தினர் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தனர்.
இதைத்தொடா்ந்து, அருள்சாமியின் இறுதிச் சடங்கு நிகழ்வுகள், வெள்ளிக்கிழமை காலையில் வீட்டில் நடந்து கொண்டிருந்தன. எனினும் பத்தாம் வகுப்பு அறிவியல் பாடத்தேர்வு நடைபெற உள்ள நிலையில், நித்திஷ்குமார் காலையில் தேர்வு எழுத பள்ளிக்குச் சென்றார்.
இந்த தகவலை அறிந்த நித்திஷ்குமாரின் நண்பர்கள் மற்றும் ஆசிரியர்கள் அவருக்கு ஆறுதல் கூறினர்.
இதனைத்தொடர்ந்து, கண்கலங்கிய படி நித்திஷ்குமார் தேர்வெழுதினார். இந்த சம்பவம் பள்ளி மாணவர்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.
பத்தாம் வகுப்பு அரசு பொதுத்தேர்வு மார்ச்.28 இல் தொடங்கி ஏப்.15 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.