
பெண் தூய்மைப் பணியாளருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக பெறப்பட்ட புகாரைத் தொடர்ந்து ஆத்தூர் வட்டார வளா்ச்சி அலுவலா் மற்றும் அலுவலக உதவியாளரை பணியிடை நீக்கம் செய்து சேலம் மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
சேலம் மாவட்டம், ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் வட்டார வளா்ச்சி அலுவலராக பரமசிவம் என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் மூன்று மாதங்களுக்கு முன் அதே அலுவலகத்தில் பணிபுரிந்த 35 வயது பெண் தூய்மைப் பணியாளரிடம் பாலியல் ரீதியான தொல்லை அளித்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக அந்த பெண் சேலம் மாவட்ட ஆட்சியர் பிருந்தாதேவியிடம் புகார் அளித்துள்ளார். பாலியல் புகாக் குறித்து ஊரக வளர்ச்சித் துறை தணிக்கையாளர் மதுமிதா, கூடுதல் திட்ட அலுவலர் நந்தினி ஆகியோர் கொண்ட விசாரணை குழு விசாரித்து அறிக்கை அளிக்குமாறு உத்தரவிட்டார்.
இதையடுத்து கடந்த 7 ஆம் தேதி, ஊரக வளர்ச்சித் துறை தணிக்கையாளர் மதுமிதா, கூடுதல் திட்ட அலுவலர் நந்தினி ஆகியோர் ஆத்தூர் ஒன்றிய அலுவலகத்தில் 20-க்கும் மேற்பட்ட பெண்களிடம் விசாரணை செய்து, அதன் அறிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் வழங்கினர்.
இதைத் தொடர்ந்து, ஆத்தூர் வட்டார வளா்ச்சி அலுவலா் பரமசிவம் மற்றும் அலுவலக உதவியாளர் கணேசன் ஆகியோரை பணியிடை நீக்கம் செய்து ஆட்சியர் பிருந்தாதேவி உத்தரவிட்டுள்ளார்.