டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை: அண்ணாமலை குற்றச்சாட்டு

டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலை
செய்தியாளர் சந்திப்பில் அண்ணாமலைபடம் | யூடியூப்
Published on
Updated on
2 min read

டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

மத்திய அரசின் டங்ஸ்டன் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து டங்ஸ்டன் சுரங்கப் பணிகளை முழுமையாகக் கைவிட வலியுறுத்தி மேலூர் அருகே விவசாயிகள் இன்று பேரணியைத் தொடங்கினர்.

பேரணியாக வந்த விவசாயிகள், மக்கள் 2,000-க்கும் மேற்பட்டோர் தற்போது தமுக்கம் அரங்கத்துக்கு அருகே முக்கிய சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள்.

மதுரை மற்றும் தேனி காவல்துறை உயர் அதிகாரிகள் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள்.

போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளில் ஒரு பகுதியினரை காவல்துறையினர் தமுக்கம் பகுதிக்குள் வரவிடாமல் தடுத்ததால் அங்கு தள்ளுமுள்ளு - வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை, டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை, விவசாயிகளுடன் தமிழக அரசு பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

'மதுரை அரிட்டாப்பட்டியில் டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதில், ஆரம்பம் முதலே நாடகமாடிக் கொண்டிருக்கிறது திமுக அரசு. டங்ஸ்டன் சுரங்கம் அமைக்கலாம் என்று, மத்திய அரசுக்குக் குறிப்பு அனுப்பி, சுரங்க ஒப்பந்தம் வழங்கப்படும் வரையில், எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல் இருந்து விட்டு, பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்ததும், தாங்களும் எதிர்ப்பு தெரிவிப்பது போல நாடகமாடியது.

மத்திய சுரங்கத் துறை அமைச்சர் கிஷன் ரெட்டி, சுரங்கம் அமைக்கும் பணிகளை நிறுத்திவைப்பதாக அறிவித்து, தமிழக அரசு மேற்கொண்டு டங்ஸ்டன் சுரங்க ஒப்பந்தங்களைப் பரிசீலிக்கக் கூடாது என்று தெரிவித்த பின்னர், திமுக அரசு அது குறித்து அரிட்டாப்பட்டி விவசாயிகளுக்கு எந்த உறுதியும் அளிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

தற்போது அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் விவசாயிகளைத் தடுத்து நிறுத்த முற்படுவது, டங்ஸ்டன் சுரங்கத்தைக் கைவிடும் எண்ணம் திமுகவுக்கு இல்லை என்பதையே காட்டுகிறது.

விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி, அவர்கள் கோரிக்கைகளைப் பரிசீலிப்பது திமுக அரசின் கடமை. அதை விடுத்து, மத்திய அமைச்சர் அறிவிப்பு வெளியிட்ட பிறகும், டங்ஸ்டன் சுரங்கம் தொடர்பாக எந்த உறுதியும் அளிக்காமல், நாட்களைக் கடத்திவிட்டு, தற்போது விவசாயிகள் போராட்டத்திற்குக் காரணமாக இருக்கிறது திமுக. உடனடியாக விவசாயிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும், விவசாயிகள் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் திமுக அரசை வலியுறுத்துகிறோம்' என்று குறிப்பிட்டுள்ளார்.

மதுரை மாவட்டம், மேலூா் அருகே அரிட்டாபட்டி பகுதியில் டங்ஸ்டன் கனிமச் சுரங்கம் தோண்ட கடந்த ஆண்டு நவம்பா் மாதத் தொடக்கத்தில் ஏலத்தின் மூலம், வேதாந்தா குழுமத்தைச் சோ்ந்த ஹிந்துஸ்தான் ஸிங்க் லிமிடெட் நிறுவனத்துக்கு மத்திய அரசு அனுமதி அளித்திருந்தது.

சுரங்கம் தோண்டும் திட்டத்தை ரத்து செய்யக் கோரி, அரிட்டாபட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதி மக்கள், அரசியல் கட்சியினா், பல்வேறு அமைப்பினா் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.