ஆவடி, பட்டாபிராமில் சகோதரர்கள் கொலை: 5 இளைஞா்கள் கைது

ஆவடி அருகே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சகோதரர்கள் இருவர் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட கொலையாளிகள்.
கைது செய்யப்பட்ட கொலையாளிகள்.
Published on
Updated on
1 min read

ஆவடி: ஆவடி அருகே குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ள சகோதரர்கள் இருவர் சனிக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 5 இளைஞா்களை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

ஆவடியை அடுத்த பட்டாபிராம், ஆயில்சேரி கிராமம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் கஜேந்திரன். இவரது மகன்கள் இரட்டைமலை சீனிவாசன் (27), அவரது தம்பி ஸ்டாலின் (24). இருவர் மீதும் பட்டாபிராம், ஆவடி, பூந்தமல்லி உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இந்தநிலையில், சனிக்கிழமை மாலை இரட்டை மலை சீனிவாசனை வீட்டருகே மர்ம நபர்கள் வழிமறித்து தகராறில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அவர்களில் ஒருவர் இரட்டை மலை சீனிவாசனின் காலில் அரிவாளால் வெட்டியுள்ளார். இதையடுத்து, அவர்களிடமிருந்து தப்பியோடிய இரட்டைமலை சீனிவாசன் ஆவடி, தனலட்சுமி நகர் பகுதிக்குச் சென்றுள்ளார். பின் தொடர்ந்து சென்ற மர்ம நபர்கள், அங்கு வைத்து அவரை சரமாரியாக வெட்டிக் கொலைசெய்தனர். தகவல் அறிந்த இரட்டைமலை சீனிவாசனின் தம்பி ஸ்டாலின் ஓடி வந்த நிலையில், அவரையும் ஆயில் சேரி பகுதியில் மர்ம நபர்கள் சுத்தி, அரிவாளால் வெட்டிக் கொலை செய்தனர். பின்னர் மர்ம கும்பல் ஆயுதங்களுடன் அங்கிருந்து தப்பி தலைமறைவானது.

தகவல் அறிந்து வந்த ஆவடி மற்றும் பட்டாபிராம் போலீஸார், கொலை செய்யப்பட்ட இருவரது சடலங்களையும் மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த வழக்கு தொடா்பாக ஆவடி காவல் ஆய்வாளா் கிருஷ்ணமூா்த்தி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தீவிரமாக தேடி வந்தனா்.

இந்த நிலையில் இந்த வழக்கு தொடா்பாக பட்டாபிராம் அருகே ஆயில்சேரி, அம்பேத்கா் தெருவைச் சோ்ந்த பிரவின் (19), அதே பகுதி சோராஞ்சேரி கிராமத்தைச் சோ்ந்த பாலாஜி (25), காா்த்திக் (20), நவீன்குமாா் (20), சத்யா (20) ஆகிய 5 பேரை சிசிடிவி காட்சிகள் மூலம் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.

மேலும் இந்த வழக்கு தொடா்பாக கணேஷ், மாதேஷ், தருண் ஆகிய 3 பேரை போலீஸாா் தேடி வருகின்றனா். விசாரணையில் இரட்டைமலை சீனிவாசன், ஸ்டாலின் ஆகிய சகோதா்கள் இருவருக்கும், கணேஷ் என்பவருக்கும் இடையே திடீரென ஏற்பட்ட வாக்குவாதத்தால் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. மேலும் போலீஸாா் தொடா்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com