
சென்னை: 1,250 ஆதிதிராவிடர் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ளவதற்காக உயர்த்தப்பட்ட நிதியுதவி தலா ரூ.2.50 லட்சம் வீதம் மொத்தம் ரூ.62.50 கோடிக்கான வரைவோலைகளை கோயில் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் வழங்கினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
இந்து சமய அறநிலையத்துறையானது தனது கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொண்டு, குடமுழுக்குகள் நடத்துதல், பக்தர்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளை மேம்படுத்துதல், திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துக்களை ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து மீட்டெடுத்தல் போன்ற பல்வேறு பணிகளை சீரிய முறையில் மேற்கொண்டு வருகிறது. மேலும், சட்டப்பேரவையில் வெளியிடப்பட்ட அறிவிப்புகளையும் தொடர்ந்து நிறைவேற்றி வருகிறது.
2021 – 2022 ஆம் ஆண்டிற்கான இந்து சமய அறநிலையத்துறை சட்டப்பேரவை மானியக் கோரிக்கையில், “கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர், பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு வழங்கப்பட்டு வந்த நிதியுதவி தலா ரூ.1 லட்சத்தை 2 லட்சமாக உயர்த்தியும், அதன் எண்ணிக்கையை தலா ரூ.1,000- லிருந்து 1,250 ஆக உயர்த்தியும் வழங்கப்படும்” என்று அறிவிக்கப்பட்டது.
அதன்படி, 2021-2022, 2022-2023 மற்றும் 2023 - 2024 ஆகிய நிதியாண்டுகளில் 3,750 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 3,750 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களின் திருப்பணிக்கு தலா ரூ.2 லட்சம் வீதம், மொத்தம் ரூ.150 கோடிக்கான வரைவோலைகள் முதல்வரால் ஏற்கனவே வழங்கப்பட்டன.
கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் 27 ஆம் தேதி முதல்வர் தலைமையில் நடைபெற்ற இந்து சமய அறநிலையத்துறை ஆலோசனைக் கூட்டத்தில், “கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ள வழங்கப்பட்டு வரும் தலா 2 இலட்சம் ரூபாய் நிதியுதவியினை ரூ.2.50 லட்சமாக உயர்த்தி வழங்கப்படும்” என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அதன்படி, சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை(ஜன.29) நடைபெற்ற நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை சார்பில், 2024 – 2025 ஆம் நிதியாண்டிற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள 1,250 கிராமப்புறத் திருக்கோயில்கள் மற்றும் 1,250 ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்களில் திருப்பணிகளை மேற்கொள்ள உயர்த்தப்பட்ட நிதியுதவி தலா ரூ.2.50 லட்சம் ரூபாய் வீதம் மொத்தம் ரூ. 62.50 கோடியை வழங்கிடும் அடையாளமாக 12 திருக்கோயில்களின் நிர்வாகிகள் மற்றும் பூசாரிகளிடம் திருப்பணிக்கான வரைவோலைகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
இதன்மூலம் அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள திருக்கோயில்கள் மட்டுமின்றி, கட்டுப்பாட்டில் இல்லாத திருக்கோயில்களிலும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு புதுப்பொலிவு பெற்றிடும்.
இந்நிகழ்ச்சியில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, தலைமைச் செயலாளர் நா.முருகானந்தம், திருவண்ணாமலை ஆதீனம் தவத்திரு குன்றக்குடி பொன்னம்பல அடிகளார், பேரூர் ஆதீனம் தவத்திரு சாத்தலிங்க மருதாசல அடிகளார், மயிலம் பொம்மபுர ஆதீனம் தவத்திரு சிவஞான பாலய சுவாமிகள், சிரவை ஆதீனம் தவத்திரு குமரகுருபர சுவாமிகள், சுற்றுலா. பண்பாடு மற்றும் அறநிலையங்கள் துறை முதன்மைச் செயலாளர் பி.சந்தர மோகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.