
கோவை மத்திய சிறையில் மீண்டும் மற்றொரு ஆயுள் தண்டனை கைதி உயிரிழந்தது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை மத்திய சிறையில் 2,000-க்கும் மேற்பட்ட தண்டனை கைதிகளும், 500-க்கும் மேற்பட்ட விசாரணை கைதிகளும் அடைக்கப்பட்டுள்ளனா். இவா்களுக்கு தனித்தனியாக கட்டடங்கள் உள்ளன.
இந்த நிலையில், திருப்பூர் கருவம்பாளையத்தை சேர்ந்த அலெக்ஸ்(37), போதைப் பொருள் கடத்தல் வழக்கில் தண்டனை பெற்று 2021 ஆம் ஆண்டு முதல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவருக்கு சிறுவயதில் இருந்தே ஆஸ்துமா மற்றும் வலிப்பு பிரச்னை இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் அவருக்கு சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.
இதற்கிடையே அவருக்கு நோய் பாதிப்பு அதிகமானது. இதனால் அவர் கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இது குறித்து சிறைத் துறை அதிகாரிகள் மற்றும் ரேஸ்கோா்ஸ் காவல் துறையினா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
கோவை மத்திய சிறையில் கடந்த 27 ஆம் தேதி நெல்லையைச் சேர்ந்த ஏசுதாஸ் என்பவர் மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில், மீண்டும் மற்றொரு கைதி உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.