
திருநெல்வேலி: திருநெல்வேலி பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய திமுக பொருளாளர் செல்வசங்கர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நெல்லை மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் செல்வ சங்கர். இவருக்கு மனைவி சரஸ்வதி, 2 குழந்தைகள் உள்ளனர். செல்வ சங்கர் திமுகவின் பாளையங்கோட்டை தெற்கு ஒன்றிய பொருளாளராகவும், அவரது மனைவி சரஸ்வதி பாளையங்கோட்டை ஊராட்சி ஒன்றிய ஒன்பதாவது வார்டு கவுன்சிலராகவும் உள்ளார். இவர்கள் வழக்கம் போல் செவ்வாய்க்கிழமை இரவு குடும்பத்தினருடன் சாப்பிட்டுவிட்டு இரவு தூங்கச் சென்றனர்.
இந்த நிலையில், புதன்கிழமை அதிகாலை சுமார் 3 மணியளவில் வீட்டின் முன்பு திடீரென பயங்கர வெடி சப்தம் கேட்டுள்ளது. இதையடுத்து சிறிது நேரம் கழித்து வீட்டை விட்டு வெளியே வந்த செல்வசங்கர் தம்பதியினர் வீட்டின் முன்பு பெட்ரோல் குண்டு வீசப்பட்டு ஆங்காங்கே சிறுது சிறிதாக துகல்கள் தீப்பற்றி எரிவதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர். தீப்பற்றி எரிந்துகொண்டிருந்த துகல்களை தண்ணீரை ஊற்றி அணைத்துவிட்டு உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். .
தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த முன்னீர்பள்ளம் போலீசார் தடய அறிவியல் துறையினருடன் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சம்பவம் தொடர்பாக சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளையும் கைப்பற்றி போலீசார் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பான காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
இந்த சம்பவம் அரசியல் காரணங்களுக்காக நடைபெற்றதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில், பெட்ரோல் குண்டு வீச்சு குறித்து தகவல் அறிந்த செல்வசங்கர் ஆதரவாளர்கள் வீட்டின் முன்பு குவிந்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.